யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் திங்கட்கிழமை
2016-02-08




முதல் வாசகம்

உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13

அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார். அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய �ஏத்தானிம்� மாதத்தின் பண்டிகையின்போது, அரசர் சாலமோன் முன் கூடினர். இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர். அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர். பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை. இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை. குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத் தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. அப்பொழுது சாலமோன், �ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்� என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உம் உறைவிடத்திற்கு வல்லமையோடு எழுந்தருளும்.
திருப்பாடல் 132: 6-7. 8-10

6 திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம். 7 ``அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கிமுன் வீழ்ந்து பணிவோம்!'' பல்லவி

8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக! 9 உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக! 10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்'' (மாற்கு 6:56)

மாற்கு நற்செய்தியின் முதல் பகுதியில் (மாற் 1:1-8:30) இயேசு வல்லமை வாய்ந்த ''மருத்துவராக'' வருகின்றார். அவரை அணுகிச் சென்ற மக்கள் எல்லாரும் நலம் பெறுகிறார்கள். அவருடைய ''மேலுடையின் ஓரத்தைத் தொட்டவர்கள்'' கூட குணமடைகிறார்கள் (காண்க: மாற் 5:21-34). இயேசுவின் பேரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவுகிறது. இதை மாற்கு தெளிவாகக் காட்டுகிறார். ஆனால் மாற்கு நற்செய்தியில் 8ஆம் அதிகாரத்தின் நடுப்பகுதியில் திடீரென ஒரு மாற்றம் நிகழ்வதைப் பார்க்கிறோம் (மாற் 8:31). இயேசுவை வல்லமை மிக்க மெசியாவாகக் கண்டவர்கள் இயேசு பற்றிய முழு உண்மையையும் அறியவில்லை என மாற்கு உணர்த்துகிறார். இயேசு புரிந்த அதிசயங்களும் புதுமைகளும் அரும்செயல்களும் மக்களுக்கு நலன் கொணர்ந்தது உண்மையே. ஆனால் அத்தகைய வெளிச் செயல்களைக் கொண்டு மட்டுமே இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் பதில் கண்டுவிட முடியாது.

இயேசு மெசியா என்றாலும் அவர் ''பல துன்பங்கள் அனுபவித்து, யூத சயமத் தலைவர்களால் உதறித் தள்ளப்பட்டு, கொலைசெய்யப்படுவார்'' (மாற் 8:31) என்னும் செய்தி அவருடைய சீடர்களுக்கும் பிறருக்கும் ஒரு பேரதிர்ச்சியாகத் தோன்றியிருக்க வேண்டும். வல்லமை மிக்கவராகக் காட்சியளித்த மெசியா இங்கே வல்லமையற்றவராகத் தெரிகின்றார். ஆக, இயேசுவின் வல்லமை எதில் அடங்கியிருக்கிறது என்பதை மாற்கு படிப்படியாக விளக்குவார். இயேசு மக்களுக்குக் குணமளித்தார் என்றால் அது அவர் மனித வாழ்வில் உள்ளார்ந்த விதத்தில் கொணர்ந்த நலனின் வெளிப்பாடுதான். வல்லமையற்றவராகத் தோன்றுகின்ற இயேசுதான் உண்மையிலேயே வல்லவர் என நாம் ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் ஆழ்ந்த நம்பிக்கை தேவை. இயேசு கடவுளின் செய்தியை நமக்கு வழங்குகின்றார் என நாம் உறுதியாக ஏற்பதே அந்நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, வல்லமையற்ற நிலையிலும் உம் வல்லமையை நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.