இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை 2016-02-06
புனித கொன்சலா கார்சியா
முதல் வாசகம்
நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன்
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13
அந்நாள்களில் சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். �உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!� என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், �உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?� என்று கேட்டார். சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், �நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
திருப்பாடல் 119: 9. 10. 11. 12. 13. 14
9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். -பல்லவி
11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். -பல்லவி
13 உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34
அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
உழைப்பும், ஓய்வும் !
“உழைப்புதான் மானிடரின் இலக்கணம் ” என்று கூறினார் கார்ல் மார்க்ஸ். “உழைக்காதவர் உண்ணலாகாது” என்றார் பவுலடியார். உழைப்புக்கு இலக்கணமாக யாவே இறைவனையே விவிலியம் எடுத்துக்காட்டாகத் தருகிறது. தொடக்க நூலின் முதல் அதிகாரங்களில் இறைவன் ஆறு நாள்களில் இந்த உலகையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். ஓய்வின்றி உழைப்பதும் தவறு. உழைப்பின்றி ஓய்வெடுப்பதும் தவறு. நன்கு உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். அந்தத் தந்தையின் திருவுளத்திற்கேற்பவே, திருமகன் இயேசுவும் செயல்பட்டார். அதிகாலை செபத்திலிருந்து, பகல் நேர நற்செய்தி அறிவிப்பு, மாலையில் நோயாளர்களைக் குணப்படுத்துதல், இரவில் வீடுகளில் உறவை வளர்த்தல் எனப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார். தம் சீடர்களுக்கும் அந்தப் பயிற்சியை வழங்கினார். எனவேதான், சீடர்கள் திருத்தூதுப் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்து, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்து “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ” என்று மொழிந்தார். சற்று ஓய்வெடுங்கள் என்னும் சொல்லாடல் நம் கவனத்தை ஈர்க்கிறது. தேவையான ஓய்வு. இறைவன் நம்மீது அக்கறை உள்ளவர், நம்மைப் புரிந்துகொள்பவர் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் அடையாளமாகத் திகழ்கிறதல்லவா?
மன்றாட்டு:
ஞானத்தின் ஊற்றே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது ஞானத்திலும், பேரன்பிலும் நாங்கள் உழைக்கவும், போதுமான உடல், உள்ள, ஆன்ம ஓய்வுபெறவும் வேண்டும் எனத் திருவுளம் கொண்டீரே. உமக்கு நன்றி. நீர் மட்டுமே தர முடிகின்ற அமைதியை, இளைப்பாறுதலை, ஓய்வை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வீராக.
|