யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: எரேமியா: 1:4-5,17-19, 1 கொரி 12:31-13:13, லூக்கா 4:21-30



உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/>


திருப்பலி முன்னுரை - 1

இறை அன்பில் நிறைந்தவர்களாய் ஆண்டவரின் நாளான ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரத் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் இறை மக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன்.

உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்; என்கிறார் ஆண்டவர். விடுதலை தருபவர் இயேசு, நம்மை விடுவிக்க வருபவர் இயேசு: இரக்கத்தின் ஆண்டவர்; நாம் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் முழுமையாகப் பெற்று மகிழவும், நம்மைத் தூய்மைப்படுத்தி புதுப்பித்து வழிநடாத்தவும் தூய இறைவாக்கினர்களையும், குருக்களையும் தாமேதெரிந்தெடுத்து, அர்ச்சித்து நமக்குப் பணிபுரிய நம் மத்தியில் அனுப்புகின்றார்; என்பதனையும்: உண்மை அன்பு என்றால் என்ன: அது எப்படி வாழப்படவேண்டும் என்பதனையும் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

திருமுழுக்கு வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் என்னும் மாபெரும் உரிமையையும், உறவையும், அன்பையும் கொடையாகப் பெற்றுள்ள நாம் அனைவரும்: உண்மையான அன்பை நம்முடைய வாழ்வாலும், வார்த்தையாலும் வாழவும், பகிரவும் அழைக்கப் படுகின்றோம். எனவே நமக்குள் குடிகொண்டிருக்கும் பகைமை, வெறுப்பு, போட்டி மனப் பான்மை முதலியவற்றை வேரறுத்து உண்மையான இறைமக்கள் சமூகமாக வாழ நம்மை அர்ப்பணித்து தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1:4-5,17-19

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு; "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். " நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார் ஆண்டவர். 

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் வாய் நாள்தோறும் உமது; மீட்பை எடுத்துரைக்கும்
திபா: 71: 1-6. 15,17

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்: ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்: எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். (பல்லவி)

என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்: கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்: (பல்லவி)

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை: ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்: தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்: உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்(பல்லவி)

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்: உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்: இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

இரண்டாம் வாசகம்

அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12:31-13:13

சகோதர சகோதரிகளே! நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப் பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்க மிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:21-30

தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், "மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்" என்னும் பழமொழியைச் சொல்லி, "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.. ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

என்றும் மாறாத மிகுந்த இரக்கமுள்ள இறைவனே!

திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரும் இரக்கத்தின் ஆண்டில் கடவுளால் அன்பு செய்யப்படுபவர்களாகவும், நாங்கள் அனைவரும் ஓன்றிணைந்து வாழந்தலே அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடும் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், மற்றவர்களின் துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் இணைந்திருக்க வேண்டிய நல்லமனதினை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

உம்மைப் போற்றுகிறேன். என்னுடைய குடும்பத்தினரை, நண்பர்களை முற்சார்பு எண்ணங்களோடு பார்த்த நேரங்களுக்காக என்னை மன்னியும். அனைவரையும் திறந்த மனதுடன், புதிய பார்வையில் சந்திக்கின்ற அருளைத்தாரும், எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்னைக் கை பிடித்து நடக்கப் பழக்கின தந்தையே! எம் இறைவா!

எங்கள் குடும்பங்கள் இயேசுவின் மறைஉடலில் இணைந்திருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பிலும், செபத்திலும் தாங்கிக் கொள்ளவும், துன்பங்களில் ஆறுதலாக இருக்கவும், மகிழ்ச்சி பெருமையோடு பகிர்ந்து கொள்ளவும், குடும்பங்களில் தியாக உணர்வுகள் நிறைந்திருக்கவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே,

உமது பணித்திட்ட அறிக்கை உமது இலக்குத் தெளிவைக் காட்டகிறது. இறைக்குலமாகிய நாங்களும் உம்மைப் போல, பணி இலக்குகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த அருள்தாரும். இன்று நாம் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் விடை நாம் வைத்திருக்கும் இறைவார்த்தையில் இருக்கின்றது. அந்த இறைவார்த்தையை வாசிக்கவும், கேட்கவும் நாங்களும் முயற்சி செய்ய இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்று திகைத்து நிற்பவர் தெளிவு பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் சமூகத்தில் இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் மறுவாழ்வு பெறவும், எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், பிறந்திருக்கின்ற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்றும், நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதி காண அருள்புரியவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான இறைவா,

உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி: அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும், இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

-"இவர் யோசேப்பின் மகன் அல்லவா?"-

பிள்ளை வளர்ப்புக்கு அருமையான எடுத்துக்காட்டாக இப்பகுதியைச் சொல்லலாம். பெற்றோருக்குப் பணிந்திருப்பது, தொழுகைக்கூடம் சென்று கற்றுக்கொள்வது, விவிலியம் வாசிப்பது,செபிப்பது,பலரும் பாராட்ட வாழ்வது, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வாழ்வது,இக்கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொல்லுகிறது இந்த பகுதி;.

கலிலேயாவில் உள்ள நசரேத்துக்குச் சென்று தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்திருக்கின்றார். தினமும் தொழுகைக்கூடம் சென்று விவிலியம் வாசித்து கற்றுக்கொண்டு இறை அருளிலும் வளர்ந்தார். இயேசுவின் பெற்றோர்கள் அவரை இவ்வாறு வளர்த்து ஆளாக்கினர்.

இயேசு இளம் வயதில் இப்பண்புகளில் வளர்ந்து தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளர். அவரது அறிவாற்றல், அருள்வாக்கு,அமைந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்ததால், வைத்த கண் வாங்காமல் இயேசுவையே பார்த்த வண்ணமாய் இருந்துள்ளனர். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" என்று பாராட்டியுள்ளனர்.

இன்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்கைகளை இவ்வாறு வளர்க்க வேண்டும். உலகக் கல்வி கொடுத்தால் மட்டும் போதாது. இறை அறிவையும் அனுபவத்தையம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உலகம் உங்களைப் பாராட்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும்.