யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
திருக்காட்சிகாலம்
2016-01-06




முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

11 அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.12 கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்: அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.13 அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறாரெனவும் அறிந்து கொள்கிறோம்.14 தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்: சான்றும் பகர்கிறோம்.15 இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்: அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்: அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.17 கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது.18 அன்பில் அச்சத்திற்கு இடமில்லை: மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது: அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே எல்லா இனத்தாரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
திருப்பாடல்கள் 72:1-2,10,12-13

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!0 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:45-52

45 இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.46 அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.47 பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.48 அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை.49 அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ' அது பேய் ' என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.50 ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார்;51 பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.52 ஏனெனில் அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"மக்களை அனுப்பிவிட்டு, இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்" (மத்தேயு 14:23)

இயேசுவின் வாழ்க்கையில் இறைவேண்டலும் பணிவாழ்வும் ஒன்றோடொன்று இணைந்து பிணைந்து இழையோடுவதை நாம் காணலாம். மக்களுக்குப் பணிசெய்கின்ற அதே வேளையில் இயேசு கடவுளோடு ஒன்றித்திருக்கும் நிலையை ஒருபோதும் மறந்ததில்லை. எனவே, அவ்வப்போது இயேசு தனிமையை நாடினார். அத்தனிமையின்போது அவர் தம் தந்தையாம் இறைவனோடு ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டார். அவருடைய தனிமை உண்மையிலேயே தனிப்பட்ட நிலையாக ஒருபோதும் இருந்ததில்லை. அவருடைய உணர்வுநிலையில் கடவுளோடு அவர் கொண்டிருந்த ஆழ்ந்த உறவு ஒளிர்ந்து மிளிர்ந்தது. இயேசுவுக்கு உள்ளார்ந்த சக்தியாக இருந்தது இந்த இறை உறவுதான். தந்தையோடு தமக்கிருந்த உறவினை இயேசு எவ்வளவு போற்றினார் என்றால் அந்த உறவைப் புதுப்பித்து, ஆழப்படுத்திக்கொள்ள அவர் அவ்வப்போது நேரம் ஒதுக்கினார்.

கிறிஸ்துவின் சீடர்களுக்கும் இந்த இறை உறவு இன்றியமையாதது. இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் அவருடைய பணி வாழ்வைத் தங்கள் கண்முன் கொண்டிருக்க வேண்டும் என்பதும், அவரைப் போலப் பணிசெய்வதில் ஈடுபட வேண்டும் என்பதும் தெளிவு. அதே நேரத்தில் இயேசுவை நாம் பின்செல்ல வேண்டியது அவர் கடவுளோடு கொண்டிருந்த இறை உறவில் நாமும் ஆழமாக ஊன்றியிருக்க நம்மையே கடவுளிடம் கையளிப்பதாகும். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தமக்கு உணவு என்று இயேசு கூறினார். அவருடைய உள்ளார்ந்த வாழ்வுக்கு சக்தியும் உரமுமாக அமைந்தது கடவுளோடு அவர்கொண்ட உறவு என்றால் நமக்கும் கிறிஸ்தவச் சான்று வாழ்வில் உள் சக்தியாக விளங்கவேண்டியது இந்த இறை உறவே என்பதில் ஐயமில்லை. பணி வாழ்வும் இறை உறவும் இணைந்து செல்ல வேண்டியது திருச்சபைக்கும் இன்றியமையாதது. திருச்சபை ஆற்றுகின்ற பணி மக்களின் வாழ்வில் பயன் கொணர வேண்டும் என்றால் இறைவாழ்வு ஆழப்படுகின்ற விதத்தில் திருச்சபை தன் பணியோடு இறைபணியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் இணைந்து செல்லும்போது திருச்சபையின் செயல்பாடு மனிதருக்கு நலன் கொணரும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் மக்களுக்குப் பணிசெய்யும் போது உம்மோடு அன்புறவில் இணைந்திருக்க எங்களையே கையளிக்க அருள்தாரும்.