திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள் :
முதல் வாசகம்: மீக் 5:1-4,
பதிலுரைப் பாடல்: திபா: 80:1-2,14-15,17-18,
இரண்டாம் வாசகம்: எபி 10:5-10,
நற்செய்தி வாசகம்: லூக்1:39-45
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
திருப்பலி முன்னுரை - 1
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட,
அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
இன்று திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது.
கடவுளின் பெயரால் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் மீட்பரின் வருகையை எதிர்நோக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இயேசுவை வயிற்றில் சுமந்தவராய் சென்ற கன்னி மரியாவை சந்தித்த எலிசபெத்தும், யோவானும் அடைந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
வரவிருக்கும் நம் ஆண்டவரும் அமைதியின் அரசருமான இயேசுவை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்க தயாராவோம்.
நிகழவிருக்கும் கிறிஸ்து பிறப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டுமென்று, இந்த திருப்பலியில் மன்றாடுவோம்.
திருப்பலி முன்னுரை -2
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மை மீட்டு வழிநடாத்தும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி
இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
இன்று திரு வருகைக்காலம்நான்காம் ஞாயிறு திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
வலிமை பொருந்தியவரும், மாட்சியுடையவரும், நம்மை வழிநடாத்துகின்றவரும், அச்சமின்றி வாழச் செய்கின்றவரும்,
அமைதியை அருள்பவரும் கடவுள் மாத்திரமே என்பதை இன்றைய இறைவார்த்தைகள் எடுத்தியம்பி,
எச் சந்தர்ப்பத்திலும் நாம் மனந்தளராது விசுவாச உறுதியோடு இருக்கவேண்டும் என்னும் செய்தியையும் தருகின்றன.
அத்தோடு அன்னை மரியாள் கடவுளின் தாயார் என்பதை தூய ஆவியார் எலிசபெத்தம்மாள் வழியாக வெளிப்படுத்துகின்றார்
இந்தச் சிந்தனைகளை நம் உள்ளத்தில் ஆழப் பதித்தவர்களாக,
அன்னை மரியாளைப் போன்று இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்ற நம்மை அர்ப்பணிப்போம். நம் தீய வழிகளிலிருந்து மனந்திரும்பி,
ஆண்டவரே இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்: எமக்கு வாழ்வு அளித்தருளும்: நாங்கள் உமது பெயரைத் தொழுவோம், என்று ஆண்டவரிடம் சொல்லுவோம்.
இந்த நமது ஆன்மிக செயற்பாட்டிற்கு தூய ஆவியானவர் துணை தர வேண்டுமென்று அருள் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5
ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
திருப்பாடல் 80: 1-2. 14-15. 17-18
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி
இரண்டாம் வாசகம்
உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது''என்கிறார்.
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார்.
பின்னர், “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற் றல், அவரையே பாடுவேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
வலிமை பொருந்தியவரும், மாட்சியுடையவருமான தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் உம்மை விட்டு அகலாது,
பணி வாழ்வு குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் தம் வாழ்வில் கடைப்பிடித்து,
உமது திருவுளத்தை நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டிய சக்தியையும்,
ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இஸ்ரயேலின் ஆயரே, படைகளின் கடவுளே , தந்தையே!
நாங்கள் ஒவ்வொருவரும் எம் தீய வழிகளிலிருந்து மனந்திரும்பி,
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலாமல்; நாங்கள் உமது பெயரைத் தொழுது,
உமது திருவுளத்திற்கேற்ப வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டுமென்றும்,
இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே பல்வேறு பணிகள் செய்வதற்குரிய பல்வேறு வகையான அருட்கொடைகளையும்,
ஆற்றல்களையும் பெற்றுக்கொண்ட நாங்கள் அவற்றை தூய உள்ளத்தோடு இறைபணிக்காய்ப் பயன்படுத்தி வாழ
எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உறவின் ஊற்றே இறைவா!
இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும், உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து:
குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று:
குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்:
பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புத் தந்தையே இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்:
எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும்,
செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்றும்,
மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மனஉளச்சல், வேதனைகள்,
உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்து தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிட தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்ற தந்தையே இறைவா!
உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் தூய அன்னை மரியாவைப் போன்று கள்ளமற்ற அன்புடையோராகவும்,
தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுகின்றவர்களாகவும்,
உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுகின்றவர்களாகவும்,
பிறர் எங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணிச் செயற்படவும் வேண்டிய ஆற்றலை எமக்கு அளித்தருள வேண்டுமென்றும்,
எமது குடும்பங்கள் ஒவ்வொன்றையும் உமது பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம்.
ஒவ்வொரு குடும்பமும் செபத்திலும், தியாகத்திலும், மனமாற்றத்திலும், விசுவாசத்திலும் உறுதியாக நிலைத்து நின்று
முன்மாதிரிகையான குடும்பங்களாக வாழவும், அன்பு, உறவு, பிரமாணிக்கம் ஆகியவற்றில் அதிக அக்கறை கொண்டு வாழவும்,
அதன் வழியாக தமது குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கண்டடையவும் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!
எமது இளம் தலைமுறையினர் நிதானத்தோடும்,
முழு ஞானத்தோடும் உமது வழிகளைக் கண்டடைந்து, உமக்குரியவர்களாக வாழ அவர்களை நிறை உண்மையை நோக்கி வழி நடாத்தியருள வேண்டுமென்றும்,
நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர்,
தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும்
உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும்,
நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தாயும் தந்தையுமான இறைவா,
ஒவ்வொரு தாயின் வழியாகவே நீர் பிள்ளைகளை ஆசிர்வதிக்கின்றீர். வளப்படுத்துகின்றீர்.
என் மண்ணகத் தாய்க்காக நன்றி கூறுகிறேன்.
அந்தத் தாயின் வழியாக நீர் தந்த ஆசிகளுக்காக, கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன்.
அதுபோலவே, என் விண்ணகத் தாயான அன்னை மரியவாவுக்காகவும் நன்றி கூறுகிறேன்.
அந்தத் தாயின் பரிந்துரையால் நீர் என்மீது பொழிந்த எண்ணிலடங்கா ஆசிகளுக்காக, அருள்கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன்.
ஒரு தாயினும் மேலாக என்னை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில்; எங்களுடைய உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும்,
ஆழப்படுத்திக்கொள்ளவும் உமது அருளைத் தந்தருளும்.
நாங்கள் அன்பு செய்வோரை வாழ்த்தி, ஆசி கூற, உமது ஆவியின் அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தாயும் தந்தையுமான இறைவா,
உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி:
அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும்,
இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான
போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை
மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை
வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின்
பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது
பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|