யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2015-12-05




முதல் வாசகம்

உங்கள் கூக்குரலுக்குச் செவிசாய்த்து அருள்கூர்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26

இஸ்ரயேலின் தூயவராம் ஆண்டவராகிய இறைவன் கூறுவது: சீயோன்வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார். என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் �இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்'' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும். நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும். முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும். கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவு நாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும். ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்றுதிரண்டாற் போல ஏழு மடங்காகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.
திருப்பாடல்147: 1-2. 3-4. 5-6

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

5 நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35 - 10: 1, 6-8

அக்காலத்தில் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, �அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்'' என்றார். இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: "வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிருவரையும் அனுப்பியபோது...கூறியது: '...கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்''' (மத்தேயு 10:5)

இயேசு கலிலேயாவிலும் பிற பகுதிகளிலும் போதித்த வேளையில் பல மக்களைச் சந்தித்தார். பலர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுள் பன்னிருவரை இயேசு தனிப்பட்ட விதத்தில் தம் பணியைத் தொடர்ந்து ஆற்ற நியமித்தார். பேதுருவைத் தலைமையாகக் கொண்ட இப்பன்னிருவர் குழு முற்காலத்தில் இஸ்ரயேலில் தோன்றியிருந்த பன்னிரு குலமுதுவர்களுக்கு அடையாளம். இயேசு ஒரு புதிய இஸ்ரயேல் சமூகத்திற்கு வித்திட்டதுபோல, புதிதாகப் பன்னிருவரை நியமித்து அவர்கள் புதிதாக உருவாகிய சமூகத்திற்கு வழிகாட்டிகளாகச் செயல்பட நியமித்தார். இது ஒரு பெரிய பொறுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், இவ்வாறு இயேசுவின் தனிப்பட்ட அன்பிற்கு உரித்தான இப்பன்னிருவருக்கும் இயேசு அளித்த முக்கிய பணி அவர்கள் இறையாட்சி பற்றிய நற்செய்தியை இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்சென்று எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பதே. இப்பணி முதலில் இஸ்ரயேல் மக்களின் நடுவிலும் பின்னர் பிற இனத்தார் நடுவிலும் நிகழ்ந்தது. பன்னிருவரைப் பணியாளர்களாக அனுப்பியபோது இயேசு கூறியது: ''கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்''. பன்னிருவர் பெற்ற கொடை யாது? அவர்கள் இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உரியவர்களானார்கள்; அவர்களுக்கு இயேசு தலைமைப் பொறுப்புக் கொடுத்தார்; அவர்கள் தம்மைப் போல இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்றும், தாம் ஆற்றிய வியத்தகு செயல்களை மக்களின் நன்மைக்காக ஆற்ற வேண்டும் என்றும் அனுப்பினார். இதுவே பன்னிருவர் இயேசுவிடமிருந்து பெற்ற கொடை; இது அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தாம் பெற்ற கொடையைப் பிறரின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என இயேசுவின் சீடர் உணர்ந்தனர்.

இன்று இயேசுவைப் பின்செல்ல அழைக்கப்பட்ட நாமும் கொடைகள் பல பெற்றுள்ளோம். இவ்வுலகில் வாழ்வதற்குக் கடவுள் நம்மைப் படைத்தது முதல் கொடை. இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் வழியாக நம்மைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டு நிலைவாழ்வுக்கு உரிமையாளராக்கியது மாபெரும் கொடை; கடவுளையும் அவர் பெயரால் நம்மைத் தேடிவந்த இயேசுவையும் அவர்களிடமிருந்து நமக்குக் கொடையாக வழங்கப்படுகின்ற தூய ஆவியையும் நாம் உள்ளத்தில் ஏற்று, கடவுளின் வழியில் நடப்பதற்காக அழைக்கப்படுவதும் கடவுள் நமக்குத் தருகின்ற கொடையே. இவற்றையெல்லாம் நமக்கென்று மட்டுமே வைத்துக்கொள்ளாமல் பிறரோடு பகிர்ந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். வானிலிருந்து பொழிந்து நிலத்தை வளப்படுத்துகின்ற மழை நிலத்திடமிருந்து கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை (குறள் 211). அதுபோல, கைம்மாறு எதிர்பாராமல் தம் நலன்களைப் பிறருக்குக் கொடையாக வழங்குவோருக்குக் கடவுள் தம்மையே கொடையாகக் கொடுப்பார்.

மன்றாட்டு:

இறைவா, உம்மையே கொடையாக எங்களுக்கு வழங்கிய நன்மையை நினைந்து உம்மைப் போற்றுகின்றோம்.