யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-12-04




முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல்27: 1. 4. 13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார்...அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்'' (மாற்கு 6:1,5-6அ)

''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மாற்கு நற்செய்தியில் மைய இடம் பெறுகிறது. இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்து வந்து, அங்கே ஓய்வுநாளன்று கற்பிக்கத் தொடங்குகிறார். இயேசு யூத முறைப்படி திருச்சட்டம் பயின்றவரல்ல; அக்கால வழக்கப்படி வேறொரு யூத அறிஞரை அணுகி அவரிடம் பாடம் பயின்றவருமல்ல. எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் கற்பித்தது வழக்கத்துக்கு மாறானது; சட்டத்திற்கு முரணானது. இதை மக்கள் கவனிக்கிறார்கள். ''இவர் தச்சரல்லவா?'' (மாற் 6:3) என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசு தச்சர் என அழைக்கப்படுவது இந்த ஓரிடத்தில் மட்டுமே என்பதையும் நாம் கருதலாம். மேலும் மக்கள் இயேசுவைப் பார்த்து, ''இவர் மரியாவின் மகன்தானே!'' என்று வியப்புறுகின்றனர் (மாற்6:3). வழக்கமாக ஒருவரை அடையாளம் காட்டும்போது அவருடைய தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவருடைய மகன் இன்னார் என்று கூறுவது யூத மரபு. ஆனால் இங்கே இயேசு ''மரியாவின் மகன்'' என அடையாளம் காட்டப்படுகிறார். ஒருவேளை இயேசு மரியாவும் யோசேப்பும் கூடி வாழும் முன்னரே மரியாவின் வயிற்றில் கருவானது இவ்வாறு குறிக்கப்படுகிறதோ? எவ்வாறாயினும், ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மக்களின் உள்ளத்தில் எழுந்ததையும் அக்கேள்விக்கு மக்கள் வெவ்வேறு பதில்கள் அளித்ததையும் மாற்கு பதிவு செய்கிறார்.

ஆக, இயேசுவின் உறவினரும் சரி, சீடர்களும் சரி, ஊர் மக்களும் சரி, இயேசுவை யார் என அடையாளம் காணத் தவறிவிட்டார்கள். தீய ஆவிகள்தாம் இயேசுவை அடையாளம் கண்டு, அவரை ''உன்னத கடவுளின் மகன்'' (மாற் 5:7) என அழைக்கின்றன. இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம் என்பதால் மட்டுமே நம்மில் உண்மையான நம்பிக்கை தோன்றிவிடாது. இயேசுவின் குடும்பத்தினரே அவரை அடையாளம் காணத் தவறினார்கள்; அவரை நன்கு அறிந்த ஊர் மக்கள் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவரோடு வழிநடந்து அவருடைய போதனைக்குச் செவிமடுத்த சீடர்கள் கூட அவரை அறிந்திடவில்லை. உள்வட்டத்தில் இருப்போர் பார்வையற்றிருக்க வெளிவட்டத்தில் இருப்போர் தெளிந்த பார்வையோடு இயேசுவை அடையாளம் காண்கிறார்கள். இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ளலாம். இயேசுவை நாம் உண்மையாகவே அறிந்துள்ளோம் என இறுமாப்புக் கொள்ளாமல் அவரை மேன்மேலும் ஆழமாக அறிந்து அன்புசெய்திட நம் உள்ளத்தைத் திறந்திட வேண்டும். அப்போது நம்மில் நம்பிக்கை வளரும். இறை அறிவும் பளிச்சென ஒளிரும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை அறிந்து அன்புசெய்திட எங்களுக்கு அருள்தாரும்.