யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் புதன்கிழமை
2015-11-25

புனித கத்தரின்




முதல் வாசகம்

உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 5: 1-6 13-14 16-17 23-28

அந்நாள்களில் பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான். அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான். அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிலிருந்து கொண்டு வந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். அவர்கள் திராட்சை மது குடித்துக் கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான். அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, ``என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே? உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன் மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்'' என்றான். அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: ``உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னின்று அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார்.'' பொறிக்கப்பட்ட சொற்களாவன: ``மேனே மேனே, தேகேல், பார்சின்'' இவற்றின் உட்பொருள்: `மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர். பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி ஏத்திப் போற்றுங்கள்.
தானி (இ) 1: 39-40. 41-42. 43-44

39 கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 40 விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

41 மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; 42 காற்று வகைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

43 நெருப்பே, வெப்பமே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 44 நடுக்கும் குளிரே, கடும் வெயிலே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது' என்றார்'' (லூக்கா 21:17-18)

இயேசுவைப் பின்செல்லும் மனிதர்கள் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவேதான் இயேசு ''என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்'' என்று கூறுவதாக லூக்கா பதிவு செய்துள்ளார் (லூக் 21:17). லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் அதுதான். கிறிஸ்துவைப் பற்றி மக்கள் நடுவே எடுத்துரைத்து, அவர்களிடம் நம்பிக்கையைத் தூண்டி எழுப்பிட கிறிஸ்தவ போதகர்கள் முயன்றார்கள். அப்போது யூதர் நடுவிலிருந்தும் பிற இனத்தார் நடுவிலிருந்தும் பலத்த எதிர்ப்பு எழுந்ததுண்டு. இது தூய பவுல் பணியாற்றிய இடங்களில் நிகழ்ந்தது என்பதை அவருடைய திருமுகங்களிலிருந்து அறிகிறோம். இயேசு எருசலேம் கோவில் அழிந்தபடும் என அறிவித்தார். தொடர்ந்து உலக இறுதியில் போர்களும் குழப்பங்களும் ஏற்படும் எனவும் முன்னறிவித்தார். இந்த இறுதிக் காலம் என்பது விரைவில் வரும் என தொடக்க காலத் திருச்சபை எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இறுதிக் காலம் ஒருவிதத்தில் ஏற்கெனவே வந்துவிட்டது. அதாவது, இயேசுவின் சாவு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் இந்த இறுதிக் காலத்தின் தொடக்கமாக அமைந்தன. கடவுளின் ஆட்சி இவ்வுலகில் தொடங்கியுள்ளதை இயேசுவின் வாழ்வு முன்னறிவித்தது. இருப்பினும் அந்த இறுதிக் காலத்தில் வாழ்கின்ற நாம் இறையாட்சியின் நிறைவை இன்னும் காணவில்லை.

இறையாட்சியின் நிறைவு எப்போது எங்கே நிகழும் என்பதையும் நாமறியோம். ஆனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் நாம் இயேசுவிடத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். ''உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது'' (லூக் 21:18) என இயேசு கூறுவது மிகைக் கூற்றாகப் படலாம். ஆனால் அதன் பொருள் நமக்குத் தெளிவாகவே உள்ளது. அதாவது, இயேசுவைத் தங்கள் மீட்பராக ஏற்று, அவரில் அசையாத நம்பிக்கை கொள்கின்ற மனிதர்கள் எந்த ஆபத்து வந்தாலும் அஞ்சவேண்டியதில்லை. கடவுளின் வல்லமை அவர்களைத் தாங்கிக் கொள்ளும். இதனால் நமக்குத் துன்பங்களே வராது என இயேசு கூறவில்லை. மாறாக, துன்பங்கள் வந்தாலும் கடவுள் நம்மைக் கைவிட மாட்டார் என்னும் உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது. இயேசுவின் வாழ்வில் துன்பத்திற்கு இடம் இருந்தது. ஏன், கேவலமான சிலுவைச் சாவுக்கு அவர் உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார். சாவின் மீது வெற்றி கொண்டார். அந்த வெற்றி நமக்கும் உண்டு என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற வாக்குறுதி.

மன்றாட்டு:

இறைவா, துன்பங்கள் நடுவிலும் உம்மைப் பற்றிக் கொள்ள அருள்தாரும்.