யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு

திருவழிபாடு ஆண்டு - B



இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1அரசர் 17:10-16

எபிரே 9: 24-28

மாற்கு 12: 38-44

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரிய அன்பு மக்களே தமது நிறையன்பால் நம்மை வழிநடாத்திக்கொண்டிருக்கும் நம் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

வாழ்வில்லை, வழியில்லை, உதவிட யாருமில்லை என்ற அங்கலாய்ப்பிலும், மனவேதனையிலும் இருப்போருக்கு மாபெரும் ஆறுதலின் செய்தியாக இன்றைய இறைவார்த்தைகள் அமைந்துள்ளன. இறைவன் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் சார்பாக நின்று செயலாற்றுகின்றார், உணவளிக்கின்றார், விடுதலை அளிக்கின்றார், குணமாக்குகின்றார், பாதுகாக்கின்றார், ஆதரிக்கின்றார், அன்பு செலுத்துகின்றார் என்பதே நமக்கு மகிழ்வு தரும் அச் செய்திகளாகும். இறைவனுடைய இம் மாபெரும் அருளிரக்கத்திற்காக நன்றி கூறிக்கொண்டு, நிபந்தனையற்ற விதத்தில் அவருடைய அன்பையும், இரக்கத்தையும் நமது முன்மாதிரிகையான வாழ்வால் மற்றவருக்கு எடுத்துரைக்கும் சாட்சிகளாய் வாழ இத்திருப்பலியில் அருள் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16

அந்நாள்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார். அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்” என்றார். எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
திருப்பாடல்146: 7. 8-9. 9-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9 அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசகம்

பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து, மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பார் என்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44

அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, ``மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே'' என்று கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ``இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எல்லாத் தலைமுறையினரையும் இரக்கத்தோடு ஆட்சி அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நிறை ஞானத்தோடும், விவேகத் தோடும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளவர்களை வழி நடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கும் அன்புத் தந்தையே இறைவா!

உலக நாடு முழுவதிலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள், இன்னும் உதவியின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழும் ஏழைக் கைம்பெண்கள் ஆகியோரை உமது இரக்கத்தால் பாதுகாத்து வழி நடாத்திட வேண்டுமென்றும், நாங்கள் ஒவ்வொருவரும் கருணையும, இரக்கமும், அன்பும் உள்ளவர்களாகவும், நிபந்தனையின்றி அன்புப்பணிக்காக எம்மையே அர்ப்பணிக்கும் நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரான அன்புத் தந்தையே இறைவா!

இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை

தொங்கல் ஆடையா? ஒரு கொதிராந்தா?

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தயாகம் செய்வதால் தானா அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெறிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இங்கே காண்கிறோம்.

இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் தொங்கலாடை, ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவற்றின் வெளி அடையாளம். கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைக்கின்ற பொறுப்பை நாங்கள் மனமுவந்து நிறைவேற்றிட அருள்தாரும்.