யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-10-30

புனித ஜெறாட்




முதல் வாசகம்

என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல் 147: 12-13. 14-15. 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி

14 அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, ``ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். பிறகு அவர்களை நோக்கி, ``உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?'' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு...'ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?' என்று கேட்டார்'' (லூக்கா 14:3)

ஓய்வு நாளில் இயேசு மக்களுக்கு குணமளித்தார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உள்ளது (காண்க: யோவான் 5:1-18; மாற்கு 1:21-28; மாற்கு 1:29-31; மாற்கு 3:1-6; யோவான் 9:1-16; லூக்கா 13:10-17; லூக்கா 14:1-6 போன்றவை). ஓய்வு நாளில் என்னென்ன வேலைகள் செய்யலாகாது என்பது பற்றி விரிவான சட்டங்கள் இருந்தன. அவற்றை இயேசு கடைப்பிடிக்கிறாரா இல்லையா என்று அவருடைய எதிரிகள் கூர்ந்து கவனித்துவந்தனர் (காண்க: லூக் 14:1). மக்களுக்கு குணமளிப்பது ஓய்வுநாளை மீறியதாகாது என்பது இயேசுவின் கொள்கை. ஓய்வுநாள் மனிதருக்கேயன்றி மனிதர் ஓய்வுநாளுக்கல்ல என்பது அவருடைய போதனை.

சில சமயங்களில் சட்டங்கள் எதற்காக எழுந்தன என்பதை மனிதர் மறந்துவிடுகின்றனர். சட்டங்கள் வகுக்கப்படும்போது அவை மனிதருக்கு நலம் பயக்கும் என்னும் எதிர்பார்ப்போடுதான் உருவாக்கப்படுகின்றன. கால இட சூழ்நிலைகள் மாறும்போது சட்டங்கள் தங்கள் பொருளை இழந்துவிடுவதுண்டு; அல்லது சட்டத்தின் உட்பொருளை மக்கள் மறந்துபோய்விடுகின்ற ஆபத்து உண்டு. இதை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் செயல்பாடு சட்டத்தை அறவே எதிர்ப்பதாக அமைந்தது என்று சிலர் கூறுவர். இது முற்றிலும் உண்மை என்று கூற முடியாது. இயேசு யூத சமயத்தில் காணப்பட்ட பல சட்டங்களை ஏற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது இயேசு இணைச்சட்ட நூலையும் லேவியர் நூலையும் மேற்கோள் காட்டி, ''கடவுளை அன்புசெய்வதும் அடுத்திருப்போரை அன்புசெய்வதும்'' முதன்மையாக கட்டளை என்றுரைத்தார் (காண்க: மத்தேயு 22:34-40). எனவே, இயேசு சட்டத்தில் பல வகைகளும் படிகளும் நிலைகளும் இருப்பதைக் காட்டுகிறார். எச்சட்டம் முதன்மையானது என நிர்ணயிப்பதில் வேறுபாடு எழக்கூடும். ஆனால் சட்டத்தின் உட்பொருளை மறந்துவிட்டால் சட்டமே ஒரு சர்வாதிகாரியாக மாறி மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடும். இத்தகைய கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நம்மை விடுவிக்க வந்தார் இயேசு.

மன்றாட்டு:

இறைவா, மனிதருக்கு நலம் புரிவதையே நோக்கமாகக் கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.