யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-10-27




முதல் வாசகம்

நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25

சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர் நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காகத் தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் மகிழ்ச்சியுறுகின்றோம்.
திருப்பாடல்கள் 126: 1-2. 2-3. 4-5. 6

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி

2 ``ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின'' என்று கூறினார். மீண்டும் அவர், ``இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

சிறியவற்றில் நம்பிக்கை கொள்வோம் !

இறையாட்சியை இயேசு கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகிறார். கடுகு விதை மிகவும் சிறியது. ஆனால், வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கும் தங்குமிடமாகிறது. அதுபோல, புளிப்பு மாவும் சிறிய அளவானது பெரிய அளவு மாவையும் புளிப்பேற்றுகிறது. இறையாட்சியின் செயல்கள் மாபெரும் செயல்களில் அல்ல, சின்னஞ்சிறு செயல்கள் வழியாகப் பரவுகிறது என்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசுவின் குழந்தை தெரசாள் சிறிய வழி என்னும் சிறு செயல்கள் வழியாகவே பெரிய ஆற்றல்மிகு சாதனைகளைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.

எனவே, சிறிய செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவனமாக இருப்போம். திருப்பாடல் 131 இந்த சிந்தனையை நன்கு வெளிப்படுத்துகிறது. ”ஆண்டவரே, என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. என் பார்வையில் செருக்கு இல்லை. எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” என்று அருமையாகப் பாடுகிறார் திருப்பாடலாசிரியர். நாமும் பெரிய செயல்களில் கவனம் கொள்ளாமல், சின்னஞ்சிறு செயல்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவோம், இறைவனை மாட்சிமைப்படுத்துவோம்.

மன்றாட்டு:

சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்போரைப் பாராட்டும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இன்று முழுதும் நான் செய்ய இருக்கிற ஒவ்வொரு செயலையும் இறையாட்சிக்குரிய விதத்தில் செய்ய எனக்கு ஞானத்தைத் தந்தருளும்.