யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-10-23




முதல் வாசகம்

சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25

சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
திருப்பாடல்கள் 119: 66,68. 76,77. 93,94

66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். -பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். -பல்லவி

93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர். 94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வெளிவேடக்காரரே,... இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?'' (லூக்கா 12:56)

இயேசு இறையாட்சி பற்றிப் போதித்த வேளையில் அவர் வழியாகக் கடவுள் பேசுகின்றார் என்ற உண்மையைச் சிலர் ஏற்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை. இயற்கையில் தோன்றுகின்ற அடையாளங்கள் வழியாகப் பல உண்மைகளை அறியக் கற்றுக்கொண்ட மனிதர் கடவுளிடமிருந்து வருகின்ற அடையாளங்களை ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று இயேசு கேட்டார். வானம் சிவந்தால் கால நிலை நன்றாக உள்ளது எனவும், காற்று மந்தாரமாக இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும் எனவும் (காண்க: மத்தேயு 16:2-3) அறிந்துகொள்ள மனிதருக்கு இயலும் என்றால் கடவுளாட்சி பற்றிய அடையாளங்களின் பொருளை அவர்கள் அறியத் தவறியது ஏன்? தம்மை மனிதருக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள் பல அடையாளங்கள் வழியாகத் தம் உடனிருப்பையும் வல்லமையையும் நமக்கு அறிவிக்கின்றார். கடவுளின் வெளிப்பாடு இன்றைய உலகிலும் தொடர்கிறது. இந்த உண்மையை 2ஆம் வத்திக்கான் சங்கம் எடுத்துரைக்கிறது. இயேசுவின் நற்செய்தியை ஒவ்வொரு தலைமுறையினரும் நன்முறையில் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் ''காலத்தின் குறிகளை'' நாம் கண்டுகொண்டு அவற்றின் வழியாக நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். ''காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து, நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக் கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருச்சபையின் கடமையாகும்'' (2ஆம் வத்திக்கான் சங்கம், ''இன்றைய உலகில் திருச்சபை'', எண் 4).

நாம் வாழ்கின்ற காலத்தின் அறிகுறிகள் பல உள்ளன: விரைவாக நிகழ்கின்ற மாற்றங்கள், மனிதர் அனைவரும் சமமே என்னும் உண்மையை ஏற்றாலும் இன்றைய உலகில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள், அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அறநெறியில் மனிதர் பின்தங்கியிருத்தல் போன்றவற்றை நாம் இன்று காண்கின்றோம். இந்த அறிகுறிகள் நமக்கு உணர்த்துவது என்ன? கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வரவேண்டும் என்றால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும்; அறிவில் வளர்கின்ற மனித குலம் அறநெறி உணர்வோடு செயல்பட வேண்டும். இயேசு நம்மிடம் கேட்கின்ற கேள்வி இது: ''இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?''

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.