யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் புதன்கிழமை
2015-09-30


முதல் வாசகம்

உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8

மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவாகிய நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன். மன்னர் என்னைப் பார்த்து, ``ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மன வேதனையே அன்றி வேறொன்றுமில்லை\'\' என்றார். நானோ மிகவும் அஞ்சினேன். நான் மன்னரை நோக்கி, ``மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டிருக்கும்போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?\'\' என்றேன். அதற்கு மன்னர் என்னை நோக்கி, ``உனக்கு என்ன வேண்டும்?\'\' என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். நான் மன்னரைப் பார்த்து, ``நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்\'\' என்று கூறினேன். அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, ``உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?\'\' என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால், திரும்பி வரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன். மீண்டும் மன்னரைப் பார்த்து, ``உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும் வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்க இருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்\'\' என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்
திருப்பாடல் 137: 1-2. 3. 4-5. 6

1 பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். 2 அங்கிருந்த அலரிச் செடிகள்மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். பல்லவி

3 ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். `சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்\' என்றனர். பல்லவி

4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! பல்லவி

6 உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில் இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ``நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்\'\' என்றார். இயேசு அவரிடம், ``நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை\'\' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, ``என்னைப் பின்பற்றி வாரும்\'\' என்றார். அவர், ``முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்\'\' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்\'\' என்றார். வேறொருவரும், ``ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்\'\' என்றார். இயேசு அவரை நோக்கி, ``கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல\'\' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களைப் பார்த்து, 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நானே தான்' என்றார்'' (லூக்கா 24:38-39)

இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டது. இறந்த ஒருவர் மீண்டும் உயிர்பெற்று வந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் இறப்பார். இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து விடுவிக்கப்பட்ட இலாசர் இவ்வாறே மீண்டும் இறந்தார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் அவ்வகையைச் சார்ந்ததல்ல. இயேசு சாவின்மீது வெற்றிகொண்டார். இறந்து உயிர்பெற்ற அவர் மீண்டும் இறக்கமாட்டார். மனித அறிவு இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. எனவேதான் நாம் இயேசுவின் உயிர்த்தெழுதல் வரலாறு கடந்த நிகழ்வு எனவும், நம் நம்பிக்கையின் மையம் எனவும் கூறுகிறோம். இறந்த இயேசு மீண்டும் தம் நடுவே தோன்றியதைக் கண்ட சீடர்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். இயேசு ஓர் ''ஆவி'' போல அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனவே அவர்கள் ''கலங்கினார்கள்''. அவர்களது உள்ளத்தில் ஐயம் மேலோங்கியது. அதைக் கண்ட இயேசு தாம் உண்மையிலேயே அவர்கள் நடுவே இருப்பதை எடுத்துக்காட்டுவதற்காக அவர்களைப் பார்த்து, ''என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நாம் தான்'' எனக் கூறினார். மேலும், அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார் (காண்க: லூக் 24:43).

இயேசு உடலற்ற ஆவியல்ல; அவர் உடலோடு உயிர்பெற்றெழுந்தார். ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசுவின் உடல் பருப்பொருளாகிய நம் உடல் போலல்லாமல் ''மாட்சிமை பெற்ற உடலாக'' மாறியது என நாம் நம்புகிறோம். இதையே தூய பவுல் ''ஆவிக்குரிய உடல்'' என விளக்குகிறார் (காண்க: 1 கொரி 15:44). நாமும் சாவுக்குப் பின் கடவுளின் வல்லமையால் உடலோடு உயிர்பெற்றெழுவோம் என நம்புகிறோம். அதுபோலவே, அன்னை மரியா உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கை. இயேசு உண்மையிலேயே கடவுளும் மனிதருமாக இருந்தார். அவருடைய மனிதத் தன்மை அவருடைய சாவோடு மறைந்துவிடவில்லை, மாறாக, அவர் மாட்சிமைபெற்ற உடலோடு கடவுளின் இணைப்பில் உள்ளார் என நாம் நம்புகிறோம். அவர் நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பதும் நம் நம்பிக்கை. ஆக, ''என் கைகளையும் கால்களையும் பாருங்கள்'' என இயேசு நம்மைப் பார்த்துக் கூறுவது நாம் அவருடைய கடவுள் தன்மையையும் மனிதத் தன்மையையும் இணைத்துப் பார்க்க நமக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பாக உள்ளது. நமக்காக மனிதரான இயேசு நாம் கடவுள் தன்மையில் பங்கேற்க வழிவகுத்தார். இயேசுவை நம் வழியாகக் கொண்டு நாம் பயணம் செய்தால் கடவுளின் வாழ்வில் பங்கேற்று, எந்நாளும் மகிழ்ந்திருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் கலக்கமின்றி உம்மைப் பற்றிக்கொள்ள அருள்தாரும்.