பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு.
திருவழிபாடு ஆண்டு - B
திருப்பலி முன்னுரை - 1
ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் வாரம் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களை உரியதாக்குகிறேன்.
மக்களிடையே சிறப்பான பணி செய்பவர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பொழிவு செய்யப்பட்டு பணிப்பொறுப்புகள் வழங்கப்படுவர்.
அரசர்கள் சவுல், தாவீது அவர்வழி வந்தோர் அவ்வாறே திருப்பொழிவு செய்யப்ட்டனர்.
அதுபோலவே இறைமக்கள் முழு உரிமை வாழ்வு பெற ஆட்சியுரிமையை இஸ்ராயேலருக்கு மீட்டுத்தர மெசியா வருவார் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
மெசியா என்றால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்பது பொருள்.
நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே அது உயிரற்றதாயிருக்கும்:
என்னும் செய்தியே இன்று நமக்கு முன் வைக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.
இறைவனை அன்பு செய்கின்றோம், அவரை விசுவசிக்கின்றோம் என்று சொல்லுகின்றவர்கள்,
அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்,
இறைவனுடைய சித்தத்திற்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், தாழ்ச்சியுடையோராய் இருக்க வேண்டும்,
உயர்வு – தாழ்வு மனப்பான்மையோடு வாழக்கூடாது.
இவைகளை இன்றைய இறை வார்த்தைகள் வலியுறுத்திக் கூறுகின்றன.
எனவே நாமும் இறைவார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி,
வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன், இறைச் சித்தத்திற்கு என்றும் பணிந்திருப்பேன்,
ஒற்றுமையிலும், உறவிலும் இறைவனைச் சந்திப்பேன் என்னும் செயலோடு கூடிய உறுதிப்பாட்டுடன் வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
மீட்புக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆண்டவருக்காக துன்புறுவதைப்பற்றி
எடுத்துரைக்கிறார். நாம் குற்றமற்றவர்கள் என்று கடவுள் தீர்ப்பு வழங்கும்
வகையில் வாழ்ந்தால், இவ்வுலகின் துன்புறுத்தல்களுக்கு பயப்படத் தேவையில்லை என்ற
செய்தியை அவர் வழங்குகிறார். அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப்
பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை
செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற
வார்த்தைகள் இயேசுவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கடவுளின் துணையை
முழுமையாக நம்பி வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 5-9
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவும் இல்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
திருப்பாடல் 116: 1-2. 3-4. 5-6. 8-9
ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். 2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். பல்லவி
3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. 4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்\' என்று கெஞ்சினேன். பல்லவி
5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். 6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
மீட்புக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கிறிஸ்தவ நம்பிக்கையை
செயலில் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறார். தேவையில் இருப்பவருக்கு
தேவையானவற்றைக் கொடுக்காமல், "நலமே சென்று வாருங்கள், குளிர் காய்ந்து
கொள்ளுங்கள், பசியாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூறுவதால் எந்த பயனும்
விளையப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம்
அனைவரும், நமது நம்பிக்கையை செயலில் வெளிப்படுத்தி மீட்படையும் வரம் கேட்டு,
இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாய் இருக்கும். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?
ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ``நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்\'\' என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
ஆனால், ``ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன\'\' என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35
அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?\'\' என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்\'\' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?\'\' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா\'\' என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்\'\' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், ``என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்\'\' என்று கடிந்து கொண்டார்.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்\'\' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
வல்லமையும், திடனும் தரும் தந்தையே இறைவா!,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும், இன்றைய உலகில் நாளுக்கு நாள் எழும் சவால்களைக் கண்டு நிலைகுலைந்து விடாது,
உறுதியான விசுவாசத்தோடு பணி ஆற்றக் கூடிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டும் தந்தையே இறைவா!,
இரக்கத்தின் தந்தையே இறைவா! முன்மாதிரிகை, பொறுப்புணர்வு, தாழ்மை, இறைசித்தத்திற்குப் பணிந்து வாழுதல் ஆகிய பண்புளை எம்மிலே வளர்த்து,
உமக்கு உவப்புடைய வாழ்வு வாழவும், வாழ்விழந்து, வழியிழந்து, விரக்தியோடும், அங்கலாய்ப்போடும் வாழும் மக்களுக்கு விடுதலையைக் கொடுத்து,
அவர்கள் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்ற தந்தையே!
உலகில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் வன்முறையாளர்கள்,
மற்றும் தலைவர்கள் உண்மையினதும், நீதியினதும் வழிக்குத் திரும்பி அமைதியை ஏற்படுத்துவோராகச் செயற்பட அவர்களை மாற்றியமைத்திட வேண்டுமென்றும்,
உமது பிள்ளைகளாகிய நாம், வெறுமனே மேலோட்டமான கொண்டாட்டங்களிலும்,
சடங்காசாரங்களிலும் எமது கவனத்தைச் செலுத்தாது ,
ஆவியிலும் , உண்மையிலும் வழிபடுகின்ற மக்களாக வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றவரும்: ,
பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றவரும் சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றவரும்,
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரும்:
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றவணுமான தந்தையே எம் இளைஞர்களை
ஆன்மீகத்திலும் அருள் வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,
உலகெங்கும் நீர் செய்து வரும் அற்புதங்களின் மேன்மையால் மக்கள் உமது வல்லமையை உணரவும்,
நீர் உண்மை கடவுள் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்றும், எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தன்னலத்தினைக் களைந்து,
சமூக நலத்திலும், எளியவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து,
இறையாட்சிக்குரிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நலந்தரும் ஊற்றாம் இறைவா,
உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் முழுமையாக குணப்படுத்தி,
மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக அவர்களை மாற்ற வேண்டுமென்றும்,
உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|