யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வியாழக்கிழமை
2015-08-27

புனித மோனிக்கா


முதல் வாசகம்

கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-13

அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம். நீங்கள் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் எங்களுக்கு உயிர் வந்தது. நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக் கைம்மாறாகக் காட்ட இயலும்? நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும், உங்கள் நம்பிக்கையில் குறைவாக உள்ளவற்றை நிறைவாக்கவும், அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம். இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக! உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது பேரன்பால் நிறைவளியும்; நாங்கள் களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்.
திருப்பாடல்90: 3-4. 12-13. 14,17

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.பல்லவி

17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம் கூறியது: ``விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மத்தேயு 24:42)

கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்த இயேசு அவர்களிடமிருந்து பொருத்தமான பதில்மொழி எதிர்பார்த்தார். தம்மையே நமக்கு அருள்கூர்ந்து வெளிப்படுத்துகின்ற கடவுளுக்கு நாம் என்ன பதில் தருவோம்? முதன்முதலில் நம் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். இதையே இயேசு ''மனம் திரும்புதல்'' எனக் கூறுகிறார் (மாற்கு 1:15). இந்த மன மாற்றத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. இவ்வுலக மாயைகளால் கவரப்பட்டு அலைமோதுகின்ற மனித உள்ளம் அந்த மாயைகளை விட்டுத் ''திரும்புவது'' முதல் படி. தொடர்ந்து நாம் கடவுளை நோக்கித் ''திரும்ப'' வேண்டும். இவ்வாறு திரும்பும்போது நம் உள்ளத்தில் வேரூயஅp;ன்றுகின்ற ஒரு நல்ல பண்புதான் ''விழித்திருத்தல்'' என்பதாகும். ''விழி'' என்றால் கண்; எனவே விழித்திருப்பது ''கண்துஞ்சாமல் காத்திருப்பது'' என்னும் பொருளைத் தரும். அதே நேரத்தில், விழித்திருப்பது நம் அகக் கண்களை அகலத் திறந்து, நம்முள்ளும் நம்மைச் சூழ்ந்தும் நிகழ்வனவற்றைச் சரியாக அறிந்து உணர்ந்துகொள்வதையும் உள்ளடக்கும். விழிப்பாயிருக்கும் மனிதர் தூக்கமயக்கத்தில் ஆழ்ந்துவிடாமல் ''எதிர்பார்ப்பு'' மனநிலையோடு வாழ்வார். அப்போது, அவரைத் தேடிவருகின்ற வீட்டுத் தலைவரான கடவுளை அவர் உடனடியாக எழுந்துசென்று வரவேற்று உபசரிப்பார்.

நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என இயேசு கேட்பது ஏதோ இவ்வுலகம் விரைவில் அழியப்போகின்றது, ஆகவே நாம் தயாராக இருக்கவேண்டும் என்னும் பொருளில் மட்டுமல்ல. நமது மண்ணக வாழ்வு எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என்பதால் நாம் ''விழித்திருக்க'' வேண்டும் என்னும் பொருளும் முழுமையான விளக்கம் அல்ல. மாறாக, நாம் விழிப்பாயிருக்கும்போது நம்மைத் தேடி ஒவ்வொரு நாளிலும் நொடியிலும் வருகின்ற கடவுளை நாம் அன்போடு ஏற்று, அவருடைய அன்பு வழிநடத்தலின்கீழ் பயணம் செல்வோம். எனவே, கடவுளின் உடனிருப்பு நம்மைவிட்டு ஒருபோதும் மறைவதில்லை என நாம் ஆழமாக உணரவேண்டும். நாம் வாழ்நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் கடவுளைக் கண்டுகொண்டு, அவரை முகமலர்ந்து வரவேற்றிட நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். ''ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்'' (மத்தேயு 24:44).

மன்றாட்டு:

இறைவா, உம் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க அருள்தாரும்.