யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-08-25

புனித லூயி


முதல் வாசகம்

நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார்
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்2;1-8

1 சகோதர சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும். 2 உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். 3 எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல. 4 நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம். 5 நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. இதற்குக் கடவுளே சாட்சி. 6 கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. 7 மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். 8 இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்
திருப்பாடல்கள் 139;1,3,4,6

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!பல்லவி

3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.பல்லவி

4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.பல்லவி

6 என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது ப>ல்லவி.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 6 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23;23-26

' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.24 குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.25 ' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.26 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்'' (மத்தேயு 23:24)

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல என்பது தமிழ்ப் பழமொழி. இயேசுவோ ஒட்டகத்தையும் கொசுவையும் இணைத்து வேடிக்கையாகப் பேசுகிறார். திருச்சட்டத்தின் நுணுக்கங்களை அலசி ஆய்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சின்னஞ்சிறு காரியங்களில் மகா கவனம் செலுத்திவிட்டு, உண்மையிலேயே பெரிய, கனமான காரியங்களை மிக எளிதாக ஒதுக்கிவைத்துவிட்டதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். யூத சட்டப்படி, ஒட்டகத்தின் இறைச்சி தீட்டான ஒன்று; எனவே அதை உண்ணலாகாது (காண்க: லேவியர் 11:4). திராட்சை இரசத்தைப் பருகும்போது அதில் பூச்சிகள் விழுந்திருந்தால் அவற்றின் தீட்டுக் காரணமாகச் சட்டத்தை மீற நேரிடும் என்பதால் பானத்தை வடிகட்டும் பழக்கம் இருந்தது. எனவே, தீட்டான சின்னஞ்சிறு கொசுவை (காண்க: லேவி 11:41) அறியாமல் விழுங்கிவிடாதிருக்க எவ்வளவோ கவனமாயிருக்கின்ற ''வெளிவேடக்காரர்கள்'' தீட்டான விலங்குகளிலேயே மிகப் பெரிய விலங்காகிய ஒட்டகத்தை விழுங்குவதில் மட்டும் கவனக்குறைவாய் இருப்பது வேடிக்கையல்லவா என இயேசு பகடையாகப் பேசுவது வாசித்து இன்புறத்தக்க பகுதி.

''நீதி, இரக்கம், நம்பிக்கை'' ஆகியவையே உண்மையிலேயே முக்கியமான போதனை (மத் 23:23) என இயேசு குறிப்பிடுவது கருதத்தக்கது. இது மீக்கா இறைவாக்கினர் நூலில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது (''ஓ மானிடா...நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?'' - மீக்கா 6:8). தெளிந்த பார்வையோடு இவ்வழியில் நடக்கும்போது நாம் உண்மையிலேயே அன்புக் கட்டளையை நிறைவேற்றுபவர் ஆவோம். மாறாக, நீதியும் இரக்கமும் நம்பிக்கையும் இல்லாத மனிதர் நல்லது செய்வதுபோல வெளியே காட்டிக்கொண்டாலும் அவர்கள் ''குருட்டு வழிகாட்டிகளுக்கு'' ஒப்பாகவே இருப்பர். ஆக, நம் வாழ்வில் முதன்மை பெற வேண்டிய விழுமியங்களை இயேசு அடையாளம் காட்டுகின்றார். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, முதன்மையானவற்றை உள்ளத்தில் ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.