யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் வியாழக்கிழமை
2015-08-13


முதல் வாசகம்

ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 3: 7-10, 11, 13-17

அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ``இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு\'\' என்றார். யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், ``இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள். வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது. உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்\'\' என்றார். மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும். மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகுதொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர் எதிராகக் கடந்து சென்றனர். இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அல்லேலூயா.
திருப்பாடல் 114: 1-2. 3-4. 5-6

எகிப்து நாட்டை விட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, 2 யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித் தளம் ஆனது. பல்லவி

3 செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது. 4 மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. பல்லவி

5 கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? 6 மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள் போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்? பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21 - 19: 1

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ``ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?\'\' எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ``ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்\' என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா\' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பேதுரு இயேசுவை அணுகி, 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?' எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: 'ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்' (மத்தேயு 18:21-22)

நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால் நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிப்பதைப் பொறுத்தே நமக்குக் கடவுளின் மன்னிப்பும் கிடைக்கும் என இயேசு நமக்குக் கற்றுத் தந்த இறைவேண்டலில் கூறுகிறார் (காண்க: மத் 6:14-15). இருப்பினும், எத்தனை முறை பிறரை மன்னிக்க வேண்டும் என்னும் கேள்வியைப் பேதுரு எழுப்புகிறார். மன்னிப்புக்கு எல்லையே இல்லையா? ஏழு முறை மன்னித்தால் போதுமா? இவ்வாறு பேதுரு கேட்ட கேள்வியில் அடங்கியுள்ள பொருளைப் பார்ப்போம். நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மூன்று முறை மன்னிக்க வேண்டும் என்பது யூத அறிஞர்கள் தந்த வழிமுறை. அப்பின்னணியில் ''ஏழு முறை மன்னித்தால் போதுமா?'' என பேதுரு கேட்டது அவருடைய தாராள உள்ளத்தையே காட்டுகிறது. மன்னிப்பின் தேவையையும் சிறப்பையும் உணர்த்த இயேசு பேதுருவுக்கு ஒரு கதை சொல்லி விளங்கவைக்கிறார். பெரும் தொகையை ஓர் அரசரிடமிருந்த கடனாகப் பெற்ற பணியாளர் தன் கடனைச் செலுத்த இயலாதிருந்தபோது அவருக்குக் கடன்கொடுத்த அரசர் அதைத் தாராள மனம் கொண்டு மன்னித்துவிடுகிறார். ஆனால் இவ்வாறு மன்னிக்கப்பட்ட அந்த மனிதர் வேறு ஒருவருக்கு ஒரு சிறிய தொகையையே கடனாகக் கொடுத்திருந்தார். அச்சிறிய கடனைத் திருப்பிக்கொடுக்க இயலாத மனிதரை ஏற்கெனவே பெரும் கடன் நீக்கப்பட்ட மனிதர் மன்னிக்க முன்வரவில்லை. இதைக் கேள்விப்பட்ட அரசர் கோபமடைகிறார்; மன்னிக்க மறுத்த பணியாளருக்குத் தாமும் மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறிவிடுகிறார். இக்கதை வழியாக இயேசு உணர்த்தகின்ற உண்மைகள் இரண்டு. முதலில், கடவுள் நம் பாவம் என்னும் கடனைத் தாராள உள்ளத்தோடு மன்னித்திருக்கின்றார். எனவே, நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும் மனிதரை மனதார மன்னிக்க வேண்டும்.

இவ்வாறு மன்னிப்பதற்கு நாம் எவ்வித எல்லைக் கோடுகளையும் இடலாகாது. எத்தனை தடவை மன்னிப்பது என்று கேட்பதே பொருத்தமற்றது. ஏனென்றால் கடவுள் நம் பாவங்களை எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்பதில்லை. மாறாக, அவர் நம் பாவங்களை எப்போதுமே மன்னிக்கிறார். அதுபோல, நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை எப்போதுமே மன்னிக்க வேண்டும். ''ஏழு முறை மன்னிப்பதா?'' என்று பேதுரு நல்ல மனத்தோடுதான் கேட்டார். ஆனால் இயேசு ''எழுபது தடவை ஏழுமுறை மன்னிக்க வேண்டும்'' என்று கூறி, மன்னிப்பின் தேவையை உணர்த்தினார். அதாவது, எத்தனை தடவை மன்னித்தேன் என்று கணக்குப் போடுவதே சரியல்ல என்பது இயேசுவின் போதனை. மேலும் இயேசு மன்னிப்பின் தேவை பற்றிக் கூறிய கதையில் வருகின்ற இரு கடன் தொகைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. அரசரிடமிருந்து பணியாளர் பெற்ற கடன் மிக மிகப் பெரிது. இக்கால வழக்கில் கூறுவதாக இருந்தால் அது கோடிக் கணக்கான ரூயஅp;பாய் கடன் எனலாம். இரண்டாவது மனிதர் செலுத்த வேண்டிய கடன் தொகை நுறு நாள் வேலைக் கூலிக்குச் சமம். எனவே பிறர் நமக்கு எதிராகச் செய்கின்ற சிறிய குற்றத்தை நாம் மன்னிக்காவிட்டால் நாம் கடவுளுக்கு எதிராகச் செய்கின்ற பெரும் குற்றத்தைக் கடவுளும் மன்னிக்க மாட்டார் என்பது பொருள். இது ஒருசில தடவை வழங்கப்படுகின்ற மன்னிப்பு அல்ல. மாறாக, கடவுள் நம் பாவங்களை ஏற்கெனவே மன்னித்துவிட்டதால் நாமும் பிறருடைய குற்றங்களை ஒருசில முறை மட்டுமன்றி, எப்போதுமே மன்னிக்க வேண்டும். கடவுள் நம்மீது ''பரிவு'' கொண்டது போல (மத் 18:27) நாமும் பிறர்மீது பரிவுகொண்டு, அவர்களை ''மனமார'' மன்னிக்க அழைக்கப்படுகிறோம் (மத் 18:35).

மன்றாட்டு:

இறைவா, பிறர் குற்றங்களை நாங்கள் எப்போதும் மன்னிக்க எங்களுக்கு அருள்தாரும்.