யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-08-11

புனித கிளாரா


முதல் வாசகம்

அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 31;1-8

மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்:2 அவர் சொன்னது: இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், நீ யோர்தானைக் கடக்க மாட்டாய் என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.3 கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான்.4 எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல - அவர்களை அழித்தது போல - ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார். 5 ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.6 வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார்.7 பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு: துணிவுகொள்: இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளமாறு செய்யவேண்டும்.8 ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்
திருப்பாடல்32;3.4.7.8,9,

என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. 4 ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று.நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். 8 நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். 9 கடிவாளம் ப+ட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18;1-5 10-14

1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்று கேட்டார்கள்.2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,3 பின்வருமாறு கூறினார்: ' நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.0 ' இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.11 ( ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார். )12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'இயேசு, 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்'' (மத்தேயு 18:10)

உலகம் அனைத்தையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்த கடவுள் ஆறறறிவு கொண்ட மனிதரை மட்டுமன்றி, பருப்பொருளால் ஆகாமல் முற்றிலும் ஆவிகளாக இருக்கின்ற படைப்புகளையும் உருவாக்கினார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இந்த ஆவிகள் ''வான தூதர்கள்'' என அழைக்கப்படுகின்றனர். கடவுள் அளிக்கின்ற பணிகளை நிறைவேற்ற ''அனுப்பப்படுவோர்'' என்னும் பொருளில் இப்படைப்புகளைத் ''தூதர்கள்'' என்கிறோம். அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் ''காவல் தூதர் விழா'' கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதரையும் பாதுகாத்து வழிநடத்தும்படி கடவுள் ஒரு காவல் தூதரை அளிக்கிறார் என்பது கத்தோலிக்க மரபு. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வான தூதர் பற்றியும் காவல் தூதர் பற்றியும் செய்திகள் உள்ளன. மேலும் பண்டைய கிரேக்க இலக்கியங்களிலும் மத்தியதரைக் கலாச்சாரங்களிலும் வான தூதர் பற்றிய குறிப்புகள் உண்டு.

கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும் காக்கிறார் என்னும் உண்மை காவல் தூதர் நம்பிக்கை வழி வெளிப்படுகிறது. கடவுளின் பார்வையில் ஒவ்வொரு மனிதரும் மதிப்பு மிக்கவர்களே என இயேசு கற்பிக்கிறார். எனவே நாம் ''இச்சிறியோருள் ஒருவரையும் இழிவாகக் கருதலாகாது'' (காண்க: மத் 18:10). இங்கே சிறியோர் என வரும் சொல் சிறு பிள்ளைகளை மட்டும் குறிக்காமல், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரையும் குறிக்கலாம். அதுபோலவே, சமுதாயத்தால் தாழ்ந்தவர்கள், மதிப்பு குறைந்தவர்கள் எனக் கருதப்படுகின்ற அனைவரையும் குறிக்கலாம். இப்பின்னணியில் நாம் எந்த ஒரு மனிதரையும் இழிவாகக் கருதல் ஆகாது என இயேசு கூறுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அன்புக்கும் பராமரிப்புக்கும் உட்படுவோர் எல்லா மனிதரும் என்பதால் நாமும் கடவுளின் பார்வையை நமதாக்கி, எல்லா மனிதரையும் மாண்புடையோராக ஏற்றுப் போற்றிட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் செயல்படும்போது உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் மறைய நாம் உழைப்போம். சிறு குழந்தைகள் பெரியோரைச் சார்ந்து வாழ்வதுபோல நாமும் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்வோம். மேலும், ''சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்'' (மத் 18:4) என இயேசு கூறியதை நாம் கருத்தில் கொண்டு, செருக்கு நீக்கி, உண்மையான மனத் தாழ்ச்சியுடையோராய்க் கடவுளை அணுகிச் செல்வோம். இந்த மன நிலை நம்மில் உருவாகும்போது நம் இறைநம்பிக்கையும் ஆழப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்களை ஒவ்வொரு நாளும் காத்து வருகிறீர் என உணர்ந்து நன்றியோடு வாழ்ந்திட அருள்தாரும்.