யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-08-07


முதல் வாசகம்

நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா?
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 4;32-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? `ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப் பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார். `மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;
திருப்பாடல்கள் 77;12-16 21

11 ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன். 12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். -பல்லவி

13 கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! 14 அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. -பல்லவி

15 யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக்கொண்டீர். 20 மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;24-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார். நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்'' (மத்தேயு 16:25)

மனித உயிர் கடவுளிடமிருந்து வருகின்ற கொடை. அதை நாமாகவே விரும்பிப் பெற்றதுமில்லை, நம் விருப்பப்படி நம் உயிரை நீட்டவோ குறுக்கவோ நமக்கு உரிமையுமில்லை. ஆனால் கடவுள் நமக்குத் தருகின்ற கொடையாகிய உயிரை நாம் பாதுகாத்துப் பேணி, பொறுப்போடு நடந்துகொள்கின்ற கடமை நமக்கு உண்டு. நம் உயிரைப் பாதுகாக்கும் எண்ணம் நம்மில் இயல்பாகவே உளது. ஆனால், நம் உயிர் நம் கையில் உள்ளது என்னும் தவறான எண்ணத்தில் நம் விருப்பம்போல நடக்கத் தொடங்கிவிட்டால் நாம் பொறுப்போடு செயல்படுகிறோம் என்று கூற முடியாது. இயேசு இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறார்.

மனிதர் தம் வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோளை ஒருநாளும் மறந்துவிடலாகாது. அக்குறிக்கோள் நாம் கடவுளோடு நிலையான வாழ்வில் இணைந்து பேரின்பக் கடலில் மூழ்கிட வேண்டும் என்பதே. இதை மறக்கின்ற வேளைகளில் இவ்வுலகத்தை மட்டுமே ஒரு பொருட்டாக எண்ணுகின்ற மன நிலை நம்மில் வளர்ந்து, இவ்வுலகு சார்ந்த உயிரை எப்படியாவது தக்க வைத்துக்கொள்வோம் என நாம் தவறாகக் கருதுகின்ற ஆபத்து எழுந்துவிடும். இதற்கு மாறாக, இயேசு வாக்களிக்கின்ற வாழ்வை நாம் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அந்த நிலையான வாழ்வை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் மனமுவந்து மேற்கொள்வோம். இயேசு நமக்கு விடுக்கின்ற சவாலையும் நாம் துணிந்து ஏற்க முன்வருவோம். ஆக, உண்மையான வாழ்வு நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்றிட நாம் அவரிடம் நம்மையே கையளிப்போம். அப்போது இவ்வுலகு சார்ந்த உயிரை இறுதியானதாகக் கருதாமல், நம் வாழ்நாள்களை நன்முறையில் செலவிட்டு எந்நாளும் நிலைத்துநிற்கின்ற உண்மையான வாழ்வைக் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்று மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பறித்திட இயலாது.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வைப் பெறுவதற்கு எங்கள் உயிரையும் பலியாக்க எங்களுக்கு அருள்தாரும்.