யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் திங்கட்கிழமை
2015-08-03


முதல் வாசகம்

இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.
எண்ணிக்கை11;4-15

4 ; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது; "நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? 5 நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்ப+ண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. 6 ஆனால் இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே! " 7 மன்னா கொத்துமலிலி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது. 8 மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. 9 இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது. 10 எல்லா வீடுகளிலுமிருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்துவிட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. 11 மோசே ஆண்டவரிடம் கூறியது; உம் அடியானுக்கு ஏன் இந்தக்கேடு? நீர் எனக்குக் கருணை கட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? 12 இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? "பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்" என்று நீர் சொல்வானேன்? 13 இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, "உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்" என்றும் கேட்கிறார்களே? 14 நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. 15 இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்;
திருப்பாடல்கள் 81;11-16

11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.பல்லவி

12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன்.பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்பல்லவி.

14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.பல்லவி

15 ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்பல்லவி.

16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14;13-21:

இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.16 இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார்.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள்.18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார்.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர்'' (மத்தேயு 14:26)

இயேசு கடல்மீது நடந்த நிகழ்ச்சியை மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய நற்செய்தியாளர் குறித்துள்ளனர். மத்தேயு இந்நிகழ்ச்சியை விவரிக்கும்போது இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டுகிறார். கடல்மீது நடப்பது இயற்பு விதிகளின்படி இயலாத காரியம். ஆனால் இயேசுவின் வல்லமைக்கு முன்னால் இயற்பு விதிகள் கூட பணிந்துவிடும் என்பது மத்தேயு தரும் கருத்து. என்றாலும், சீடர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் படிப்படியாகத்தான் உணர்ந்துகொண்டார்கள். அதுவும், இயேசு சிலுவையில் தொங்கி உயிர்விட்டு, கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்து அவர்களுக்குத் தோன்றி அவர்களைத் திடப்படுத்திய பிறகே அவர்கள் இயேசுவிடத்தில் கொண்ட ''நம்பிக்கை'' முழுமையானதாக மாறிற்று. நம்மை அச்சுறுத்துகின்ற சக்திகள் பல இவ்வுலகில் உள்ளன. பசி, பிணி, நோய், சாவு ஆகிய இன்னல்கள் ஒரு புறம், மனித உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல்கள் மறுபுறம் என்று மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எல்லையில்லை. அவ்வேளைகளில் நாம் கடவுளின் உடனிருப்பை உணரத் தவறிவிடுவதுண்டு. ஏன், கடவுளையும் அவர் நமது மீட்பராக அனுப்பிய இயேசுவையும் அடையாளம் காணாமல் பேயோ பூதமோ நம்மை நெருங்கி வருகிறதோ என்று தப்புக் கணக்குப் போட்டு, நாம் தத்தளிப்பதும் உண்டு.

நாம் அச்சத்தினால் அலறுகின்ற வேளைகளில் இயேசுவிடமிருந்து பிறக்கின்ற ஆறுதலான சொற்கள் நம் உள்ளத்தில் அமைதி கொணர வேண்டும். ''துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என இயேசு சீடரைப் பார்த்துக் கூறியதுபோல இன்றைக்கும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார். புயல் மறைந்தது; காற்று அடங்கியது. சீடரின் அச்சமும் பறந்தோடியது. அந்த அமைதியான நேரத்தில் சீடர் இயேசுவிடம் தாம் கொண்ட நம்பிக்கையை அறிக்கையிடுகின்றனர்: ''உண்மையாகவே நீர் இறைமகன்''. இந்த நம்பிக்கை நமது நம்பிக்கையாக வெளிப்படும்போது இயேசு ஒருபோதும் நம்மைவிட்டு அகன்றிருக்கவில்லை என்னும் உண்மை நம் உள்ளத்தில் மிளிர்ந்து ஒளிவீசும்.

மன்றாட்டு:

இறைவா, கவலைகள் நடுவிலும் உம் உடனிருப்பு எங்களை விட்டு மறைவதில்லை என நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.