யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் சனிக்கிழமை
2015-07-18


முதல் வாசகம்

உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42: 5-7,17-24

அந்நாள்களில் எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, ``யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்'' என்று கூறினான். நாடு முழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது. உலகம் எங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள். கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச் சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரை மட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, `நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார். அவர்களோ, `நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்' என்று பதில் கூறினார்கள். பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார். மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, ``நான் சொல்கிறபடி செய்யுங்கள்; செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன். நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்கு உள்ளாகமாட்டீர்கள்'' என்றார். அவர்களும் அப்படியே செய்தனர். அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், ``உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவிசாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்'' என்று சொல்லிக் கொண்டனர். அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், ``பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!'' என்றார். யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை. அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம்மையே நம்பும் எங்கள்மீது உமது பேரன்பு இருப்பதாக.
திருப்பாடல்கள் 33: 2-3. 10-11. 18-19

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். 11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ``பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்'' (மத்தேயு 12:14-15)

திருச்சட்டம் மனிதரின் நலனுக்காகவே அளிக்கப்பட்டது என்பது இயேசு அளித்த விளக்கம். ஆனால் சட்டத்தின் பிடியில் மக்களை அடக்கிவைக்க விரும்பிய பரிசேயரோ மக்களின் உண்மையான நலன் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, அவர்கள் மனிதருக்காகப் பரிந்துபேசிய இயேசுவைத் தங்கள் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். இவ்வாறு செயல்பட்ட பரிசேயர் உண்மையைத் தேடிட மறுத்தார்கள். கடவுள் மனிதரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னவென்பதைப் பரிசேயர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. மாறாக, தங்களுக்குக் கடவுளின் எண்ணம் தெளிவாகவே தெரியும் என அவர்கள் நினைத்து இறுமாந்திருந்தார்கள். ஆனால் இயேசுவோ கடவுளின் திருவுளத்தைத் தம் வாழ்வில் நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மனிதருக்கு நலன் கொணர்வதே அவருடைய இலக்காக இருந்தது. அவர் மக்களுக்குக் குணமளித்தது அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தது (மத் 12:15).

இயேசு மக்களுக்குப் புரிந்த பணி கடவுளின் அன்பை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் அடங்கியது. கடவுள் தம் மகனாகிய இயேசுவை அன்புசெய்து, அவரைத் தம் ஆவியால் வழிநடத்தினார். ''இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்'' என எசாயா நூலில் வருகின்ற கூற்று இயேசுவின் வாழ்வில் உண்மையாயிற்று என மத்தேயு காட்டுகிறார் (காண்க: மத் 12:18; எசா 42:1). இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது கடவுளின் ஆவி இறங்கினார்; இயேசு கடவுளின் மகன் என அறிவிக்கப்பட்டார் (மத் 3:17). அதுபோலவே, இயேசு உருமாற்றம் பெற்றபோது, ''என் அன்பார்ந்த மைந்தர் இவரே'' என்னும் முழக்கம் வானிலிருந்து வந்தது (மத் 17:15). கடவுளின் ஆவியால் இயக்கப்பட்ட இயேசுவின் வாழ்வில் தாழ்ச்சியும் எளிமையும் துலங்கியது (மத் 12:19-20; காண்க: மத் 11:29; 21:4-5). அதே பண்புகள் இயேசுவின் சீடர்களுடைய வாழ்விலும் துலங்கிட வேண்டும். துன்பங்கள் நம்மை எதிர்கொண்டு வந்தாலும் கடவுளின் துணை நமக்கு என்றுமே உண்டு என இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம் திருவுளத்திற்கு இசைய வாழ்ந்திட அருள்தாரும்.