இன்று பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (12-07-2015)

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/>


திருப்பலி முன்னுரை

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டின் 15ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாகி, கூடி வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்; என் அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறேன்.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் அனைவரும், அவரது பணிக்காக அனுப்பப்பட்டிருப்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இயேசுவை அறியாதவர்களிடம், அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு என்பதை உணர அழைக்கப்படுகிறோம். இயேசுவிடம் பிறரைக் கொண்டு சேர்க்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

அழைக்கப்பெற்றவர்களே,

இன்றைய முதல் வாசகம், பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோஸ் இறைவாக்கினரை வேறிடத்துக்கு சென்று இறைவாக்கு உரைக்க கோரும் நிகழ்வை எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலில் இறைவாக்கு உரைக்க ஆண்டவரே தன்னை அனுப்பியதாக ஆமோஸ் துணிவுடன் பதிலளிப்பதை இங்கு காண்கிறோம். இறைவனின் பணியினை நாமும் துணிவோடு ஆற்ற வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

"என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு "
இறைவாக்கினர் ஆமோஸ் 7:12-15

பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம் " என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு " என்று அனுப்பினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்
திருப்பாடல் 85:8ab-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.(பல்லவி)

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.(பல்லவி)

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.(பல்லவி)

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

அழைக்கப்பெற்றவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நாம் கடவுளுக்காக கிறிஸ்துவின் வழியாக தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகிறார். இயேசு நமக்காக சிந்திய இரத்தத்தால் நாம் மீட்பு அடைந்துள்ளோம் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் தலைமையில் அனைத்தையும் ஒன்று சேர்க்க உழைக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.
திருத்தூதர் பவுல் எபேசியர்எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்: இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின்; தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலுயா, அல்லேலுயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கை தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலுயாஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:7-13

அப்பொழுது அவர் பன்னிருவரையுயம் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்: அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் " என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் " என்று அவர்களுக்குக் கூறினார்: அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்: பல பேய்களை ஓட்டினார்கள்: உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

திருச்சபைக்காக:

தன் உடலையே மானிடருக்காக பகிர்ந்தளித்த இயேசுவே! உமது அருட்சாதனைங்களை நிறைவேற்ற உம்மால் அழைப்பு பெற்ற எம் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினல்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிரையினர் அனைவரும் உடன்படிக்கையின் படி வாழ்ந்தும் உமது மக்களை இறை மனித உறவில் நாளும் வழி நடத்த போதுமான ஆன்மா, உடல் நலன்களை வழங்கி அவர்களை வழி நடத்திட இயேசுவே உம்மை மன்றாடுகிறேம்.

நாட்டிற்காக:

எமை படைத்து ஆளும் இறைவா, எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்து சமத்துவ சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மக்களுக்காக:

கருணை கடலே எம் இறைவா! உம் படைப்பின் மந்தையாகிய அனைவரும் சாதி சமயம் இனம் மொழி போன்ற பிளவுகளால் சிதறுண்டு தான் வணங்கும் தெய்வமே தெய்வம் என்று கடவுளையும் பிளவுபடுத்தும் நோக்கில் உள்ளம் சிதறுண்டு வேற்றுமை காணும் வேளையில் அவர்களுக்கு கடவுள் ஒருவரே. நாம் அனைவரும் ஒரே மேய்ப்பனின் ஆடுகள் என்ற மனநிலை மக்களிடையே மேலோங்கி நிற்கும் மனநிலை உருவாகிட வேண்டிய அருளை பொழிந்தருள இறைவா உமை மன்றாடுகிறோம்.

உலகிற்காக:

வாழ்வளிக்கும் தந்தையே இறைவா! உம்மை தங்கள் சொந்த மீட்பராக ஏற்று வாழ்வோருக்கு ஏற்படும் இன்னல்களை நீர் அறிவீர். அவர்கள் வாழ்விடம் இழந்து சொந்தகளையும் இழந்து தவிக்கும் போது அவர்களின் ஆறுதலாகவும் அவற்றை வெற்றிக்கொள்ள துணையாகவும் இருந்திட வேண்டி, இறைவா உமை மன்றாடுகின்றோம்.

இளைய சமுதாயத்திற்காக :

இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவிசிட பல தடைக்கற்கள்! மேற்கத்திய கலாச்சாரம், மின்னணு சாதனங்கள், நவீன தொலை தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலை தடுமாறும் நிலை வளர்ந்தோங்கி உள்ளதை தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கிரகித்து நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

முதியோர்களுக்காக :

அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இருவர் இருவராக !

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்ற அனுப்பினார் என்னும் செய்தியை இன்றைய சிந்தனைக்குக் கருவாக எடுத்துக்கொள்வோம். ஏன் இயேசு தம் சீடரை இருவர் இருவராக அனுப்பினார்?

இணைந்து பணியாற்றும் பண்பைக் கற்றுக்கொள்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது:. இறையாட்சிப் பணி என்பது தனி நபரி;ன் பணி அல்ல. அது ஒரு கூட்டுப் பணி. தனி நபர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைவிட, குழுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்பது நாம் அறிந்ததே. எனவே, தனி நபரின் திறன்களிலும், ஆற்றலிலும் மட்டும் நம்பிக்கை வைக்காமல், அடுத்தவரது திறன்களையும் பயன்படுத்துகின்ற பொதுமைப் பண்பை இணைந்து பணியாற்றுதல் கற்றுத் தருகிறது. மேலும், இருவர் இருவராகச் சென்று பணியாற்றும்போது, தனிமை, மன உளைச்சல், பாதுகாப்பின்மை, வழிகாட்டுதல் இன்மை போன்ற சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இருவராகப் பணியாற்றுவது உளவியல் பாதுகாப்பு தருகிறது. எனவேதான், இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார் என்று எடுத்துக்கொள்ளலாம். நாமும் இணைந்து பணியாற்றும் கலையில் வளர்வோம்.

மன்றாட்டு:

ஒருமைப்பாட்டின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் எங்கள் வாழ்விலும், பணியிலும் தனியே செயல்படாமல், இணைந்து பணியாற்றும் பண்பில் வளர உமது துhய ஆவியைத் தந்தருளும்.