யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-07-10


முதல் வாசகம்

உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!
தொடக்க நூலிலிருந்து வாசகம் 46: 1-7,28-30

அந்நாள்களில் இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார். அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, `யாக்கோபு! யாக்கோபு!' என்று அழைத்தார். அவர், `இதோ அடியேன்' என்றார். கடவுள், ``உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே. எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்'' என்றார். யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், ``இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
திருப்பாடல்கள் 37: 3-4. 18-19. 27-28. 39-40

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 19 கேடு காலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: ``இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடரை நோக்கி, 'பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:16)

நற்செய்தி அறிவிக்க தம் சீடர்களை அனுப்பிய இயேசு அவர்களுக்குப் பல அறிவுரைகள் வழங்கினார். நற்செய்தி அறிவிப்போர் எதிர்ப்புகளைச் சந்திப்பர் என்பது உறுதி. ஏனென்றால் இறையாட்சியின் மதிப்பீடுகள் இவ்வுலகப் பாணியில் அமைந்த மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கும்; அவற்றைப் புரட்டிப் போடும். அவ்வேளைகளில் எதிர்ப்புகள் எழும். இந்த எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இயேசுவின் சீடர்களை வாட்டுகின்ற ஒரு முக்கியமான பிரச்சினையே. இதற்கும் இயேசு வழிசொல்கிறார். அதாவது, சீடர்களுக்குத் துணையாக ''தந்தையின் ஆவியார்'' இருந்து செயலாற்றுவார் (மத் 10:20). இந்த ஆவியாரின் துணை கிறிஸ்தவ சமூகத்திற்கு என்றுமே உண்டென இயேசு தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதி குறிப்பாக யோவான் நற்செய்தியில் விரிவாகக் காணப்படுகிறது (காண்க: யோவா 16:1-15). கடவுளின் துணை நமக்கு இருப்பதால் இயேசுவின் சீடர்களாகிய நாம் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

இருப்பினும் இயேசு தம் சீடர்கள் மூடத் துணிச்சலோடு நடத்தலாகாது என்பதைக் குறிப்பிடும் விதத்தில், ''பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்'' என்னும் அறிவுரையை வழங்குகின்றார் (மத் 10:16). பாம்பு தனக்கு ஆபத்து வருகின்ற வேளையில் தப்பித்து ஓடப் பார்க்கும்; ஆனால் தப்பியோட வழியில்லாத நிலையில் தன்னைத் தாக்க வருகின்றவரை எதிர்த்துத் தாக்கத் தயங்காது. எனவே, ''முன்மதி'' என்னும் நற்பண்புக்குப் பாம்பு உருவகம் ஆயிற்று. அதுபோல, புறா பொதுவாக அமைதியின் சின்னமாகக் கருதப்படுவது. மாபெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உலகமே மூழ்கவிருந்தபோது கடவுள் நோவாவையும் அவருடன் இருந்தவரையும் காப்பாற்றிய கதை தொடக்க நூலில் கூறப்படுகிறது. அப்போது வெள்ளப் பெருக்கு முடிவுற்று ஆபத்து நீங்கியது என அறிந்துகொள்ளும் விதத்தில் புறா தன் அலகில் ஒலிவ இலையைக் கொணர்ந்ததை நோவா புரிந்துகொண்டார் (தொநூ 8:6-12). எனவே அமைதியையும் கபடற்ற தன்மையையும் நல்லிணக்கம் கொணர உழைப்பதையும் காட்டுகின்ற சின்னமாகப் புறா உள்ளது. சீடர்களிடம் இப்பண்புகளும் துலங்க வேண்டும். எனவே, நாம் அமைதியை நிலைநாட்டும் மனிதர்களாகக் கபடற்ற உள்ளத்தோடு செயல்பட அழைக்கப்படுகிறோம். அதே நேரத்தில் கால இடச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்மதியோடு செயல்படுகின்ற பண்பும் நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, அமைதியின் தூதுவர்களாக நாங்கள் முன்மதியோடு செயல்பட அருள்தாரும்.