யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
பொதுக்காலம் 10வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-06-12

இயேசுவின் திருஇதயப் பெருவிழா


முதல் வாசகம்

என் உள்ளம் உன் பக்கம் திரும்பியுள்ளது.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1,3-4,8உ-9

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எப்ராயிமுக்கு நடை பயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவில் இருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மீட்பருளும் ஊற்றினின்று அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.
திருப்பாடல்12: 2-3. 4. 5-6

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12, 14-19

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறை மக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 31-37

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்துபோயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்பவேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். ``எந்த எலும்பும் முறிபடாது'' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் ``தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள்'' என்றும் மறைநூல் கூறுகிறது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி'' (யோவான் 19:34-35)

யூதரின் பாஸ்கா விழா தொடங்கவிருந்த சனிக்கிழமைக்கு முந்திய நாள் இயேசு சிலுவையில் இறந்தார் என யோவான் குறிப்பிடுகிறார். இந்த நாளை நாம் ''பெரிய வெள்ளி'' என அழைக்கிறோம். ஏற்கெனவே இறந்துவிட்டிருந்த இயேசுவின் விலாவைப் படைவீரர் ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். அப்போது ''இரத்தமும் தண்ணீரும்'' வடிந்தன (யோவா 19:34). இதை நற்செய்தி ஆசிரியர் (அல்லது அவருக்குச் செய்தியை வழங்கியவர்) நேரில் கண்டு, சாட்சியம் கூறுகிறார். இயேசுவின் விலாவிலிருந்து, அவருடைய இதயத்திலிருந்து வழிந்தோடிய இரத்தமும் தண்ணீரும் இயேசுவின் இறுதிக் காணிக்கையாக அமைந்தன. இரத்தம் என்பது நற்கருணைக்கும், தண்ணீர் என்பது திருமுழுக்குக்கும் அடையாளம் என்னும் விளக்கம் திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே உண்டு.

திருச்சபையின் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பவை திருமுழுக்கும் நற்கருணையும் எனலாம். இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் நமக்கு வாழ்வளிக்கும் அருளடையாளமாக மாறின. அந்த அருளடையாளத்தின் வழியாக நாம் இயேசு கிறிஸ்துவோடு புதிய வாழ்வில் இணைகின்றோம். நம்மில் உருவெடுத்து வளர்கின்ற இறை வாழ்வு நற்கருணை என்னும் ஆன்மிக உணவால் ஊக்கம் பெறுகிறது. இயேசுவின் விலாவிலிருந்து வாழ்வு பிறந்தது என்பதை நாம் மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றுப் பின்னணியிலும் காணலாம். அதாவது, ஆதாம் என்னும் முதல் மனிதனின் விலாவிலிருந்து தோன்றியது ஏவா. அதுபோல, புதிய ஏவா என வருகின்ற திருச்சபை இயேசுவின் விலாவிலிருந்து தோன்றுகிறது. நாம் இயேசுவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கேற்கிறோம்; திருமுழுக்கின் வழியாக நமது பாவங்களும் போக்கப்படுகின்றன. இவ்வாறு நற்கருணையும் திருமுழுக்கும் நம்மைக் கிறிஸ்து வழியாகக் கடவுளோடு இணைக்கின்றன. இந்தப் புதிய வாழ்வுக்கு நாம் சாட்சிகள். பிறர்முன் நாம் இயேசு பற்றிச் சான்று பகர்கின்ற வேளைகளில் நம் வார்த்தைகளை எல்லாரும் ஏற்பர் எனக் கூறவியலாது. ஆனால் நாம் சாட்சி பகர்வதில் ஒருநாளும் தளர்ந்துவிடாமல், நாம் பெற்ற அன்பு அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, திருமுழுக்கால் புத்துயிர் பெற்ற நாங்கள் நற்கருணையால் ஊட்டம் பெற்று வாழ்ந்திட அருள்தாரும்