யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் சனிக்கிழமை
2015-06-06

புனித நோபேட்


முதல் வாசகம்

என்னை அனுப்பினவரிடம் போகிறேன்; நீங்களோ கடவுளைப் போற்றுங்கள்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 1, 5-15, 20

அந்நாள்களில் திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, �மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு� என்றார். பின்னர் இரபேலை அழைத்து, �நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக� என்று கூறினார். அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: �கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள். �முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். �மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது� என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன். நீர் உணவு அருந்துவதை விட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம் செய்யத் தயங்காதபோது, நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன். அதே போல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார். நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர். இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றை எல்லாம் எழுதிவையுங்கள்'' என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றும் வாழும் கடவுள் போற்றி!
திருப்பாடல் 13: 2. 6. 7. 8

என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. பல்லவி

6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார். பல்லவி

7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள்; என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். பல்லவி

8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கம் காட்டுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44

அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, �மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே� என்று கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, �இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்� என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்'' (மாற்கு 12:41-42)

எருசலேம் கோவிலுக்குச் சென்ற மக்கள் கடவுளுக்கென்று காணிக்கை அளித்தார்கள். கோவில் வழிபாட்டுக்கும் பிற செலவுகளுக்கும் அக்காணிக்கை பயன்பட்டது. காணிக்கை அளிப்பதன் வழியாக மக்கள் தங்கள் சமய உணர்வை வெளிப்படுத்தினார்கள். சிலர் தங்களது செல்வக் கொழிப்பைக் காட்டுகின்ற தருணமாக அதைக் கருதியிருக்கலாம். மக்கள் காணிக்கை போடுவதை இயேசு கூர்ந்து பார்க்கிறார். எல்லாரும் பார்க்கும் விதத்தில், கேட்கும் விதத்தில் அவர்கள் போடுகின்ற செப்பு நாணயம் காணிக்கைப் பெட்டியில் விழுந்து ஒலி எழுப்புகிறது. அப்போது அங்கே வருகிறார் ஓர் ஏழைக் கைம்பெண். அவரிடத்தில் செல்வம் கிடையாது. அவர் கைவசம் இருக்கும் செல்வம் இரண்டு சிறு காசுகளே. அவற்றின் மதிப்பு இன்றைய கணிப்புப்படி ஒரு சில பைசா மட்டுமே. அந்த இரு சிறு காசுகளையும் அப்பெண் காணிக்கையாக அளிக்கிறார். இதைக் கண்ட இயேசு அப்பெண்ணின் தாராள உள்ளத்தைப் பாராட்டுகிறார். அவர் ''தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்'' (காண்க: மாற் 12:44) என இயேசு அவருடைய செயலைப் புகழ்கிறார்.

இதிலிருந்து நாம் இரு கருத்துக்களைப் பெறலாம். அந்த ஏழைக் கைம்பெண்ணை இயேசு பாராட்டியதற்குக் காரணம் அவர் கொடுத்த தொகை பெரிது என்பதல்ல, மாறாக, அவர் தமக்கென்று எதையுமே தக்க வைக்காமல் ''எல்லாவற்றையுமே'' காணிக்கையாகப் போட்டுவிட்டார் என்பதே. கடவுளை முழு உள்ளத்தோடு நாம் அன்புசெய்ய வேண்டும் (காண்க: மாற் 12:29-30) என்று இயேசு கூறியதற்கு அப்பெண் முன் உதாரணம் ஆகின்றார். அவருடைய காணிக்கை ''முழுமையானதாக'' இருந்தது. அவர் கடவுளுக்குத் தம் உயிரையே காணிக்கையாக்கிவிட்டார். இன்னொரு கருத்து, அந்த ஏழைக் கைம்பெண் ஏன் அவ்வாறு காணிக்கை அளித்தார் என்பதைப் பற்றியது. அக்காலத்தில் ''கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கியவர்கள்'' இருந்தார்கள் என இயேசு கூறினார் (காண்க: மாற் 12:40). கடவுளின் பெயரால், சமயத்தின் பெயரால் மக்களைச் சுறண்டிய அதிகாரிகள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். மனிதர் மாண்போடு வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமேயன்றி, அவர்கள் சமயச் சட்டங்களுக்கு அடிமைகளாக்கப்பட்டு, துன்பத்தில் வாட வேண்டும் என்பதல்ல (காண்க: மாற் 2:23-28; 3:1-5; 7:9-13). ஆயினும், இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள உள்ளத்தைப் போற்றினார். இயேசுவும் தம்மையே முழுமையாக நமக்குக் கையளித்தார்; தம் உயிரை நமக்குக் ''காணிக்கையாக்கினார்''. அவரைப் போல, அந்த ஏழைக் கைம்பெண்ணைப் போல நாமும் முழு உள்ளத்தோடு கடவுளை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, தாராள உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.