யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் புதன்கிழமை
2015-06-03

சார்லஸ் லுவங்கா


முதல் வாசகம்

நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை; உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை.
தோபித்த3;1-11, 16-17

1 அந்நாட்களில் தோபித்து ஆகிய நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்; தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்; 2 "ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை; உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர். 3 இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்; என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். 4 உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம், நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்; அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். 5 என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை; உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை. 6 இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்; என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்; ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்; முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்; உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்; ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும், இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல். 7 அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்துவந்த இரகுவேலின் மகள் சாரா, தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித்;துரைத்ததைக் கேட்க நேரிட்டது. 8 ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்றுவிட்டது. இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், "நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை. 9 உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்? நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம்" என்று பழித்துரைத்தாள். 10 அன்று அவள் மனத் நொந்து அழுதாள்; தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள். ஆனால் மீண்டும் சிந்தித்து, "என் தந்தையை மக்கள் பழிக்கலாம்; 'உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்; அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்' என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இனிமேல் கேட்க வாய்ப்பு இராது" என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். 11 அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்; "இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக! 16 அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது. 17 தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும், இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையம்விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்
திருப்பாடல்கள் 25;2-9

2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.பல்லவி

3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.பல்லவி

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.பல்லவி

5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.பல்லவி

7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.பல்லவி

9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 12;18-27

அக்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, 19 "போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். 20 சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 21 இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. 22 ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 23 அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!" என்று கேட்டனர். 24 அதற்கு இயேசு அவர்களிடம், "உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். 25 இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். 26 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? "ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள் நானே" என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! 27 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சதுசேயர் இயேசுவிடம், 'உயிர்த்தெழும்போது அவர் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?' என்று கேட்டனர்'' (லூக்கா 20:33)

இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர். சில வேளைகளில் அவர்கள் நல்ல எண்ணத்தோடு கேள்விகள் கேட்டார்கள். அக்கேள்விகளுக்கு இயேசு பொருத்தமான பதிலளித்தார். ஆனால் வேறு சில வேளைகளில் சிலர் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்கத்துடன் கேள்வி கேட்டனர். இத்தகைய கேள்விகளில் ஒன்று ''உயிர்த்தெழுதல்'' பற்றியது. இக்கேள்வியைக் கேட்டவர்கள் சதுசேயர்கள். இவர்கள் பரிசேயருக்கு எதிரான குழுவினர். பரிசேயர் தொழுகைக் கூடங்களை ஆதரித்தவர்கள். ஆனால் சதுசேயரோ எருசலேம் நகரில் அமைந்த கோவிலில் மட்டுமே கடவுளுக்கு வழிபாடு நடத்தப்பட வேண்டும் என வாதாடினார்கள். அவர்கள் விவிலியத்தில் ஏற்றுக்கொண்ட நூல்கள் ''தோரா'' என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்து நூல்கள் மட்டுமே. மேலும், சதுசேயர் சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்னும் உண்மையை மறுத்தனர். இயேசுவிடம் அவர்கள் கேட்ட கேள்வி நமக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் அன்றைய யூத வழக்கப் பின்னணியில் அக்கேள்வியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவருடைய கொழுந்தனே அப்பெண்ணை மனைவியாக ஏற்றுத் தம் சகோதரருக்கு வழிமரபு உண்டாக்க வேண்டும் என்பது மோசே வழங்கிய சட்டம். அது இணைச் சட்டம் என்னும் விவிலிய நூலில் உள்ளது (காண்க: இச 25:5-6). இவ்வாறு ஏழு சகோதரர்களை ஒருவர்பின் ஒருவராக மணந்த பெண் ''உயிர்த்தெழும்போது யாருக்கு மனைவி ஆவார்?'' (லூக் 20:33) என்பது சதுசேயர் எழுப்பிய தந்திரக் கேள்வி.

இக்கேள்விக்கு இயேசு அளித்த பதிலில் இரு பகுதிகள் உள்ளன. முதலில் இயேசு ''உயிர்த்தெழுவோர் பெறும் வாழ்வு'' எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குகிறார். பின்னர், சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்பதற்கு விவிலிய ஆதாரம் வழங்குகிறார். விண்ணக வாழ்வு இம்மண்ணக வாழ்வின் பிரதிபலிப்பாக இராது. மாறாக, மனிதர் ஒரு புதிய நிலை அடைவார்கள். எனவே, இவ்வுலக வழக்கங்கள் போலவே மறுவுலகிலும் இருக்கும் என நினைப்பது சரியல்ல. மனிதருக்கு உயிரளிக்கின்ற கடவுள் அந்த உயிர் முற்றிலுமாக மறைந்துவிடுவதை விரும்பவில்லை. ''வாழ்வோரின் கடவுளாக'' விளங்கும் இறைவன் நமக்கு வாழ்வளிக்க விரும்புகிறார். எனவே, சாவுக்குப் பின் ஒரு புதிய வாழ்வு நிலையை நாம் பெறுவோமே ஒழிய, நாம் அழிந்துபடுவதில்லை. இம்மண்ணகத்தில் கடவுள் நமக்கு வழங்குகின்ற உயிர் அவர் தருகின்ற கொடை. அதுபோலவே, நிலை வாழ்வை வழங்கும் கடவுள் நமக்குத் தம்மையே கொடையாக அளிக்கின்றார். எந்நாளும் வாழ்கின்றவர் கடவுள் என்பதால் நாமும் நிலை வாழ்வில் பங்கேற்போம். அதற்கு ஒரே வழி நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்வதுதான்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு வாழ்வளிப்பவர் நீரே என உணர்ந்து நாங்கள் செயல்பட அருள்தாரும்.