உயிர்ப்பின் காலம் 7 ஆம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (17-05-2015)

கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்புமக்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இன்று திருச்சபை இயேசு விண்ணேற்பு அடைந்த விழாவைக் கொண்டாடுகிறது. திருமகன் இயேசு, தான் உயிர்த்த 40 ஆம் நாள் வரையிலும் தன் பணித் தோழர்கள் அல்லது சீடர்களைப் பல வழிகளில் கற்பித்து, விளக்கி, வழிகாட்டி, அணியப்படுத்தினார். மேலும் அவர்கள் உடனே, நீண்ட நாட்களில் செய்யவேண்டிய பல முதன்மையான செயல்பாடுகளைத் தந்து அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும்போதே அவர் விண்ணேற்றமடைந்தார். இவ்விழாவை அவருடை தூய நாளாகிய இன்று கொண்டாடும் திரு அவையோடு சேர்ந்து நாமும் இன்று விழா கொண்டாடுவோம். எனவே உங்கள் அனைவருக்கும் என் அன்பான விண்ணேற்பு விழா வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன்.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இனியவர்களே,

திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவி வரும்வரை சீடர்கள் எருசலேமிலேயே தங்கியிருக்குமாறு இயேசு பணிப்பதையும், இயேசு இரண்டாம் முறையாக மீண்டும் வருவார் என்பதை வானதூதர் முன்னுரைப்பதையும் இங்கு காண்கிறோம். இயேசுவின் இரண்டாம் வருகைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், ``நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ``ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்'' என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, ``கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்'' என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இனியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகம், நாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உயரே ஏறிச் சென்ற கிறிஸ்துவின் விருப்பத்துக்கு ஏற்பவே, நம் ஒவ்வொருவருக்கும் அருள் வழங்கப்பட்டுள்ளது என்று புனித பவுல் எடுத்துரைக்கிறார். திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு இணைந்து, அவரது பணியை செய்யும் மறையுடலின் உறுப்புகளாக வாழும் வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-13

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், `அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. `ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எல்லாம் வல்லவராம் இறைவா,

உமது திருமகனின் உயிப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,

இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக் கொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புதுமைகளின் நாயகராம் இறைவா,

பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால் உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்றும், எங்கள் பங்கு சமூகத்தில் இணைந்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு ஒன்றித்து செயல்படும் உறுப்புகளாக வாழத் தேவையான அருளாதார நலன்களை கட்டளையிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

சிறார்களுக்காக:

“என் அன்பில் என்றென்றும் நிலைத்திருங்கள்" என்ற எம் இயேசுவே! உமது அன்பில் சிறார் அனைவரும் இன்றைய சூழலுக்கேற்ப தங்களை அன்பின் பாதையில் பயணிக்கவும், இறை – மனித – உறவில் அவர்கள் சங்கமித்து ஆசிரியர்கள் - ஆன்றோர்களின் சொல்லுக்கு கீழப்படிந்து இறைவார்த்தையின் ஒளியில் வாழ்ந்து வளர்ந்திடவும், வேலையின்றியும், வதிவிட அனுமதிக்காக வேதனையோடு காத்துக்கொண்டும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்...நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்றார்'' (யோவான் 16:16,20)

விண்ணகத்தில் இருந்து மண்ணகம் வந்தவர், மீண்டும் விண்ணகம் செல்கின்றார். தந்தையாம் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுவார். நம்முடைய விண்ணக வாழ்வுக்கு வழிகோலுகின்றார்.

இப்பணியைத் தொடர சீடர்களுக்கு தன் ஆவியைத் தந்து, ஆற்றலோடு தொடர பணிக்கின்றார். அழைக்கப்பட்டவர்கள் அத்தனைப் பேருக்கும், அபிஷேகத்தைத் தந்து, ஆசீர்வதிக்கின்றார்.

எல்லா திக்குகளிலும் அறிவிக்கப்பட வேண்டும். எங்குமே அவரது நாமம் போற்றப்பட வேண்டும். அடுத்த ஊருக்கும் போவோம். ஆங்கும் நான் அறிவிக்க வேண்டும் என்று சொன்னவர் அவர். அவரை வழிநடத்திய ஆவி நம்மையும் வழிநடத்த நாமும் பணியாற்றிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் துன்ப துயரங்களின் நடுவிலும் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.