யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் புதன்கிழமை
2015-05-06

புனித டோமினிக் சாவியோ


முதல் வாசகம்

கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்15:1-6

1 யூதேயாவிலிருந்து வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். 2 அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். 3 அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 4 அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். 5 ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, "அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்" என்று கூறினர். 6 இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்
திருப்பாடல்கள்122:1-2 4-5

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.பல்லவி

2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி

.4 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.பல்லவி

5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர் என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:1-8

1 "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். 2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். 3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். 4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். 7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். 8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனிதருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது' என்றார்'' (யோவான் 15:5)

இயேசு தம்மைத் திராட்சைக் கொடிக்கும் சீடர்களை அதன் கொடிகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுவது யோவான் நற்செய்தியில் வருகின்ற ஒரு சிறப்புக் குறிப்பு ஆகும். இயேசுவில் நம்பிக்கை கொள்கின்ற நாம் அவரோடு இணைந்து அவருடைய உயிரோடு கலந்துள்ளோம் என்பது நமக்கு அளிக்கப்படுகின்ற பேறு. அதே நேரத்தில் நாம் இயேசுவிடமிருந்து பெறுகின்ற உயிரின் ஆற்றலைக் கொண்டு ''மிகுந்த கனி தர வேண்டும்'' என்பது நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பெரிய பொறுப்பு. இங்கே ''கனி'' எனக் குறிக்கப்படுவது யாது? நம் வாழ்விலிருந்து பிறக்கவேண்டிய நற்செயல்களே இவ்வாறு குறிக்கப்படுகின்றன. இதை விளக்கும் விதத்தில் இயேசு, ''நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருக்கவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: யோவா 15:7). இயேசுவின் வார்த்தை அவருடைய போதனையை, குறிப்பாக அவர் அளித்த அன்புக் கட்டளையைக் குறிக்கிறது (காண்க: யோவா 15:10). எங்கே அன்புள்ளதோ அங்கே கடவுள் இருக்கிறார். எனவே, இயேசுவோடு இணைந்திருப்போர் அவரிடமிருந்து சக்தி பெற்று, அவர் அளித்த அன்புக் கட்டளையைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பார்கள். அன்பிலிருந்து நற்கனிகள் பிறக்கும். பிறர் வாழ்வு மலர்வதற்கான வழி தோன்றும். மனித சமுதாயம் தழைத்து வளர்வதற்கான தருணங்கள் உதயமாகும்.

இயேசுவோடு இணைந்து நாம் செயல்படாவிட்டால் நம் செயல்கள் நற்பயன் தருவனவாக அமையாது. மாறாக, கடவுளின் விருப்பத்திற்கு எதிராக நிகழ்கின்ற செயல்கள் இவ்வுலகில் தீய விளைவுகளையே கொணரும். ஆக, நாம் எப்போதும் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் என்றால் அவருடைய உயிர் நம்மில் நிலைத்திருக்க வேண்டும். இது நாம் இயேசுவிடமும் இயேசுவை நமக்குத் தந்த தந்தையிடமும் நம்பிக்கை கொள்வதால் மட்டுமே நிகழும். அவரே நமக்கு ஒளியாகவும் வாழ்வாகவும் இருக்கின்றார். அவர் காட்டுகின்ற ஒளியிலும் வழியிலும் நடந்துசெல்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். அந்நிலைவாழ்வு இவ்வுலகிலேயே தொடங்கிவிட்டது என்பதை நாம் அன்பின் கனிகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து ஒருநாளும் பிரியாத வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.