யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 4வது வாரம் வெள்ளிக்கிழமை
2015-05-01

தொழிலாளர் புனித யோசேப்பு


முதல் வாசகம்

இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: ``சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், `நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்று எழுதப்பட்டுள்ளது.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
திருப்பாடல் 2: 6-7. 8-9. 10-11

6 என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். 7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். பல்லவி 8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. பல்லவி 10 மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். 11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், `உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.'' தோமா அவரிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?'' என்றார். இயேசு அவரிடம், ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்... அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்'' (மத்தேயு 13:54,57)

மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ஓர் அடிப்படையான கருத்து இயேசுவை ஏற்றவர்கள் சிலர் அவரை ஏற்க மறுத்தவர்கள் சிலர் என்பதாகும். இயேசுவின் போதனையில் ''ஞானம்'' வெளிப்பட்டது; அவர் செய்த புதுமைகளில் கடவுளின் ''வல்லமை'' தோன்றியது. இதை இயேசுவின் சொந்த ஊராரான நாசரேத்து மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (மத் 13:54). ஆயினும் அவர்களுக்கு இயேசுவின் பெற்றோர் யார் என்றும், அவருடைய உறவினர் யார் என்றும் தெரிந்திருந்ததால் இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் தானே என முடிவுசெய்துவிடுகிறார்கள். ஆக, இயேசுவைப் பற்றிய ''வியப்பு'' ஒருபுறம், அவரைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியுமே என்னும் அலட்சியப் போக்கு மறுபுறம் - இவை நாசரேத்து மக்களின் கண்களை மறைத்துவிட்டன. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கண்களை மறைத்த திரையை அகற்ற முன்வரவில்லை.

இயேசுவைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? அவருடைய போதனை நம் உள்ளத்தைத் தொட்டு அதை உருகவைக்கிறதா? அவர் மக்களின் நன்மைக்காகப் புரிந்த அரும் செயல்கள் நம்மில் ''நம்பிக்கை'' என்னும் தீபத்தை ஏற்றிவைக்கிறதா? இயேசுவின் போதனையையும் சாதனையையும் கண்டு வியப்போர் எல்லாம் அவரில் நம்பிக்கை கொள்வதில்லை. அந்த நம்பிக்கை நம்மில் எழ வேண்டும் என்றால் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்ற முற்சாய்வுகளை நாம் களைந்திட வேண்டும். நம் உள்ளம் கபடற்றதாக மாறிட வேண்டும். அப்போது நாம் கடவுளின் அருளை நம் உள்ளத்தில் ஏற்றிட முன்வருவோம். நம்பிக்கை என்னும் ஒளி நம்மில் கதிர்வீசத் தொடங்கும். இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குன்றியவர்களாக'' இருந்தார்கள் (காண்க: மத் 6:30; 8:26; 14:31; 16:8). ஆனால் அவருடைய சொந்த ஊர் மக்களோ ''நம்பிக்கை இல்லாதவர்களாக'' மாறிவிட்டார்கள் (மத் 14:58). நம்பிக்கை நம்மில் எழும்போது கடவுளின் வல்ல செயல்கள் நம் வாழ்வில் நிகழ்வதை நாம் கண்டு உணர்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனில் நம்பிக்கை கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.