யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 3வது வாரம் புதன்கிழமை
2015-04-22


முதல் வாசகம்

, சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தன
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8:1-8

1 ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். 2 இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். 3 சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார். 4 சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். 5 பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். 6 பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். 7 ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். 8 இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

`அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்
திருப்பாடல்கள் 66:1-7

2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள் . 3 கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர் ; 4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள் . 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை . 6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம் . 7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:35-40

35 இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. 36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. 37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். 38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்;ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். 39 "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். 40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார். 35 இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்'' (யோவான் 6:40)

இயேசு அப்பங்களைப் பலுகச் செய்து, அதிசயமான விதத்தில் மக்களுடைய பசியை ஆற்றுகிறார் (யோவான் 6:1-15). தாம் புரிந்த அரும் அடையாளத்தின் உட்பொருள் என்னவென்பதையும் இயேசு விளக்குகிறார். கடவுள் மனிதருடைய உடல்சார்ந்த பசியை மட்டுமே போக்குபவர் அல்ல. மனிதருக்கு இருக்கின்ற ஆன்மிகப் பசியைப் போக்குபவரும் கடவுளே. இதற்காகவே கடவுள் தம் மகன் இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார். அழிந்துபோகின்ற மண்ணுலக வாழ்வைத் தொடர விரும்புவோர் உணவு அருந்தவேண்டும். ஆனால் அழிந்துபோகாத விண்ணக வாழ்க்கையில் பங்கேற்க விரும்புவோர் விண்ணகத்திலிருந்து வந்த இயேசுவையே உணவாகக் கொள்ளவேண்டும். இயேசுவின் போதனை மட்டுமல்ல, இயேசுவே நமக்கு உணவாகின்றார். அவரையும் அவருடைய போதனையையும் நம் உணவாக ஏற்று நாம் வாழ்ந்தால் நமக்கு நிலைவாழ்வில் பங்குண்டு.

நிலைவாழ்வு என்பது ஒருபோதும் முடிவுக்கு வராத நீடித்த வாழ்வு என்று மட்டுமே பொருளாகாது. மண்ணக வாழ்க்கையோடு ஒப்பிடும்போது நிலைவாழ்வு என்றுமே நீடிக்கின்ற வாழ்வுதான். என்றாலும், இயேசு வாக்களிக்கின்ற நிலைவாழ்வு உண்மையிலேயே ''நிறைவான'' வாழ்வைக் குறிக்கிறது. அதாவது, இம்மண்ணக வாழ்வு எப்போதுமே குறைகள் நிறைந்தது; ஆனால் நமக்கு இயேசு வாக்களிக்கின்ற வாழ்வில் எந்த ஒரு குறையுமே இராது; வாழ்வின் முழுமையை அங்கே நாம் காண்போம். இவ்வாறு வாழ்வின் முழுமையை நாம் அடையவேண்டும் என்றால் இயேசுவை நாம் நம்பவேண்டும். இயேசுவில் நம்பிக்கை கொள்வது அவருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையாக மாற்றிக்கொள்வதில் அடங்கும். இயேசுவில் நம்பிக்கை கொள்ளும்போது நமது விருப்பப்படி நாம் நடக்காமல் கடவுளின் விருப்பப்படியே நடப்போம். இயேசு தந்தையின் திருவுளத்தை ஏற்று அதற்கேற்பத் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால் புதிய வாழ்வு நிலைக்கு உயிர்பெற்றெழுந்தார். அதே நம்பிக்கையோடு நாம் வாழ்ந்து, கடவுளின் மாட்சிமையில் பங்குபெற அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடம் நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு அளிக்கிறீர் என்னும் உண்மையை நாங்கள் ஆழமாக உணரச் செய்தருளும்.