யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம்
2015-04-11

புனித ஸ்ரனிஸ்லோஸ்


முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.
``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள்.
அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.
அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர்.
அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
திபா 118: 1,14-15. 16,18. 19-21

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.
இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்'' (மாற்கு 16:6)

இயேசு சிலுவையில் தொங்கி இறந்தார். அவருடைய உடலைச் சிலுவையிலிருந்து இறக்கி, ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஓய்வுநாளும் வந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் இயேசுவின் உடலில் பூசுவதற்காக நறுமணத் தைலங்களை எடுத்துக்கொண்டு மகதலா மரியாவோடு பிற பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள். அங்கே இயேசுவின் உடலைக் காணவில்லை. கல்லறை வெறுமையாக இருந்தது. அப்போது அப்பெண்களுக்கு வழங்கப்பட்ட செய்தி ஓர் இறைவெளிப்பாடு போல் அமைந்துள்ளது. இயேசுவின் உடலைக் காணவில்லையே என அவர்கள் அஞ்சவேண்டிய தேவையில்லை என்பது அச்செய்தியின் முதல் பகுதி. பின்னர், ''நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்னும் அதிர்ச்சிதரும் செய்தி வழங்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்னும் செய்தி உண்மையிலேயே அதிர்ச்சி தருவதுதான். அவர் இறந்ததைப் பலர் கண்டார்கள்; ஆனால் அவர் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கண்டவர் யாரும் இல்லை. எனவே, இயேசுவின் உடலைத் தேடிவந்தோருக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி உண்மையிலேயே அச்சம் தருவதாக இருந்தது.

இயேசு உயிர்பெற்று எழுந்தார் என்றால் அவர் ஒரு புதிய நிலைக்குக் கடந்துசென்றுவிட்டார் என்பது முதல் பொருள். இயேசு நமக்கு ''ஆண்டவராக'' ஏற்படுத்தப்பட்டார் என நற்செய்தி நூல்களும் தூய பவுலும் குறிப்பிடுவது இந்த உண்மையைத்தான். அதே நேரத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதல் நமது உயிர்த்தெழுதலுக்கு வழியாயிற்று. இறந்த நிலையைத் தாண்டிச் சென்று நாமும் புதுவாழ்வு பெற இயேசு வழிவகுத்தார். முதலில் நாம் பாவத்திற்கு அடிமைகளாகி இறந்தநிலையில் இருப்பதை ஏற்க வேண்டும். அப்போது நாம் புதிய நிலையை அடைவதற்கான தேவை உள்ளது என நாம் ஏற்போம். இவ்வாறு புது வாழ்வு பெற நாம் கடவுளை அணுகும்போது அவர் இயேசுவின் வழியாக நம்மைத் தம்மோடு இணைத்துக்கொள்வார். இயேசுவே நமக்குப் புதுவாழ்வில் பங்களிக்கிறார். இப்புதிய வாழ்வைப் பெறுகின்ற நாம் ஒரு புதிய வாழ்க்கை முறையைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பால் பிணைக்கப்பட்டு, பிறரையும் அந்த அன்பு அரவணைப்பில் நாம் கொணரும்போது நம்மில் கிறிஸ்துவின் புது வாழ்வு துலங்கி மிளிர்கிறது என்பது பொருள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்குப் புது வாழ்வு அளித்ததற்கு நன்றி!