யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம்
2015-03-30

புனித வார திங்கள்


முதல் வாசகம்

உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 42:1-7

1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.2 அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார்.3 நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.5 விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு
திருப்பாடல்கள் 27:1-3,13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:1-11

1 பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.2 அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.3 மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,5 ' இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ' என்று கேட்டான்.6 ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.7 அப்போது இயேசு, ' மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.8 ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை ' என்றார்.9 இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள்.10 ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.11 ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை' என்றார்'' (யோவான் 12:8)

மார்த்தாவின் சகோதரி மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் இயேசுவின் காலடிகளைப் பூசுகிறார். இது இயேசுவின் மரணத்திற்கு ஒரு முன்னடையாளமாக அமைகிறது. இறந்துபோனவர்களின் உடலை நறுமணத் தைலத்தால் பூசுவது வழக்கம். மார்த்தாவுக்கும் மரியாவுக்கும் சகோதரரான இலாசர் இறந்து கல்லறையில் வைக்கப்பட்டபின் இயேசு அவரை மீண்டும் உயிர்பெறச் செய்திருந்தார். எனவே, இயேசு உண்மையிலே நமக்குத் தம் சாவின் வழியாக உயிரளிக்கிறார் என்பது தெரிகிறது. ஆனாலும் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கடவுளின் புகழுக்காக நாம் செலவுசெய்வதற்குப் பதிலாக ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டாமா என்பதே அக்கேள்வி. இதற்கு இயேசு தருகின்ற பதில்: ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை' (யோவான் 12:8) என்பதாகும். நாம் எவ்வளவுதான் உதவிசெய்தாலும் சில மக்கள் நம் நடுவே ஏழைகளாகத் தொடர்ந்து இருக்கத்தான் போகிறார்கள் என்றும், அதனால் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்னும் தவறான முடிவுக்கு ஒருசிலர் வந்துவிடுகிறார்கள்.

ஆனால் இயேசுவின் சொற்களை இவ்வாறு திரித்து விளக்குவது சரியாகாது. ஏழ்மை என்பது கடவுள் நம் மீது திணிக்கின்ற நிலை அல்ல. மக்கள் பசி பட்டினியால் வாடவேண்டும் என்றோ, அவ்வாறு வாடுவோருக்கு உதவிசெய்ய நமக்குக் கடமை இல்லை என்றோ கடவுள் நமக்குக் கூறுவதில்லை. இதற்கு நேர்மாறாக, ஏழைகளுக்கு உதவும்போது நாம் இயேசுவுக்கே உதவுகிறோம் (காண்க: மத் 26:31-46). கடவுளுக்குச் செலவழிக்கிறோம் என்னும் சாக்குப்போக்குக் கூறி ஏழைகளைச் சுறண்டுவது கடவுளுக்கு ஏற்புடையதல்ல (காண்க: மத் 15:3-9). எனவே சமூக நீதிக்காக உழைப்பதும் கடவுள் புகழுக்காகத் தியாகம் செய்வதும் இயேசுவின் போதனைப்டி மிக நெருக்கமாக இணைந்துப் பிணைந்தவை ஆகும். கடவுளை நினைந்து மனிதரை மறப்பதோ, மனிதரை நினைந்து கடவுளை மறப்பதோ கிறிஸ்தவின் பார்வையல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கின்ற அதே வேளையில் நாம் கடவுளைப் புகழ்வதையும் நாம் மறந்துவிடலாகாது.

மன்றாட்டு:

இறைவா, அனைவருக்கும் வேறுபாடின்றி உதவுகின்ற மனநிலையை எங்களுக்கு அளித்தருளும்.