யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் சனிக்கிழமை
2015-02-14

புனிதர்கள் சிறில் மெத்தோடியுஸ்




முதல் வாசகம்

கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24

அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார். அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான். ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார். அவர் பெண்ணிடம், ``உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்'' என்றார். அவர் மனிதனிடம், ``உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக் கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்'' என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய். ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார். பின்பு ஆண்டவராகிய கடவுள், ``மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர்போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது'' என்றார். எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல் 90: 2. 3-4. 5-6. 12-13

மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10

அக்காலத்தில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ``நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்'' என்று கூறினார். அதற்கு அவருடைய சீடர்கள், ``இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?'' என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, ``உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?'' என்று கேட்டார். அவர்கள் ``ஏழு'' என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்'' (மாற்கு 8:6)

இயேசு அதிசயமான விதத்தில் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் எனவும் (மாற் 6:30-44), பின்னர் அதுபோலவே நாலாயிரும் பேரின் பசியை ஆற்றினார் எனவும் (மாற் 8:1-10) மாற்கு நற்செய்தியாளர் இரு இடங்களில் குறிப்பிடுகிறார். இந்த இரு அதிசய நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியின் இருவடிவங்களாக மரபுவழி வந்திருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. இந்நிகழ்ச்சி தொடக்க காலக் கிறிஸ்தவர்களுக்கு வெறும் அதிசய நிகழ்வு மட்டுமல்ல, ஆழ்ந்த பொருள்செறிந்த நிகழ்வாகவும் சித்தரிக்கப்படுகிறது. இறுதி இரா உணவின் போது இயேசு அப்பத்தை ''எடுத்து'', ''கடவுளைப் போற்றுகிறார்''; பின் அப்பத்தைப் ''பிட்டு'' தம் சீடர்களுக்குக் ''கொடுக்கிறார்'' (காண்க: மாற் 14:22). அந்த அப்பம் வெறும் உணவு மட்டுமல்ல, இயேசுவின் ''உடலாகவும்'' இருக்கிறது. இவ்வாறு, அப்பம் பலுகிய நிகழ்ச்சியும் நற்கருணை ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியும் பல பொது அம்சங்களைக் கொண்டிருப்பதை நாம் காணலாம்.

இயேசு மக்களோடு பகிர்ந்துகொண்டது உணவு. இன்று இயேசு நம்மோடு பகிர்ந்துகொள்வது தம் உடல். அவருடைய உடலில் பங்கேற்போர் அவரைப் போல மாறிட அழைக்கப்படுகிறார்கள். அப்போது, சீடர்கள் இயேசுவிடமிருந்து அப்பத்தைப் பெற்று அதை மக்களோடு பகிர்ந்துகொண்டு அவர்களது பசியை ஆற்றியதுபோல, இன்று இயேசுவின் சீடராக அழைக்கப்படுவோரும் செயல்பட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற கொடைகளைப் பிறரோடு பகிர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.