யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-02-03




முதல் வாசகம்

நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போகமாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!
திருப்பாடல் 22: 25-26. 27,29. 30-31

உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! பல்லவி

27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும், தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். பல்லவி

30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு `இதை அவரே செய்தார்' என்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, ``என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், ``நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ``என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ``இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ``மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ``உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ``அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ``ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ``தலித்தா கூம்'' என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். ``இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம் 'தலித்தா கூம்' என்றார். அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள்'' (மாற்கு 5:41-42)

பன்னிரண்டு என்னும் எண் தனிப்பொருள் உடையது என்பது யூதர்களின் கருத்து. இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த சிறுமிக்கு வயது பன்னிரண்டு. சிறுவயதில் இறப்பது ஒரு பெரிய இழப்புதான். அக்கால வழக்கப்படி பன்னிரண்டு வயதான பெண் திருமணத்திற்குத் தகுதி பெற்று, குழந்தைப் பேறு அடையும் பருவத்தை எய்தியவர். அவ்வயதில் இறக்க நேர்ந்தால் தாய்மைப் பேறு இன்றி இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்ற அவல நிலை அவருக்கு ஏற்படும். அது குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கமாகும். இயேசுவைப் பார்க்கச் சென்ற தொழுகைக் கூடத் தலைவர் யாயிர் தம் மகள் இறந்துபோகும் தறுவாயில் இருப்பதாகத் தான் முதலில் தெரிவித்தார். ஆனால் பிறகு தம் மகள் இறந்துவிட்டாள் என்னும் செய்தியை அவருக்குத் தெரிவிக்கிறார்கள். அச்செய்தி இயேசுவின் காதிலும் விழுகிறது. இயேசுவின் உள்ளத்தில் இரக்கம் பொங்கி எழுகிறது. அவர் யாயிரின் வீட்டுக்குள் செல்கிறார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை மட்டுமே தம்மோடு வர அனுமதிக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளின் போது இந்த மூன்று சீடர்கள் மட்டுமே இருப்பதை நாம் கருதலாம். எடுத்துக்காட்டாக, இயேசு மலை மீது தோற்றம் மாறியபோது இம்மூன்று சீடர்களும் அவரோடு இருந்தார்கள் (மாற் 9:2). எருசலேமின் அழிவுபற்றி இயேசு அறிவித்தபோது அவர்கள் இருந்தார்கள் (மாற் 13:3-4). கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருமே இயேசுவோடு இருந்தார்கள் (மாற் 14:33). எனவே, இயேசு பன்னிரு வயது நிரம்பிய சிறுமியைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழச் செய்த நிகழ்ச்சி ஒரு புதுமை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருளுடைய ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்தது.

அதாவது, இயேசு மக்களுக்கு வாழ்வளிக்க வந்தார். அவர்களுக்குப் புத்துயிர் வழங்க வந்தார். அவர்களுக்குக் கடவுளின் வாழ்வில் பங்களிக்க வந்தார். எனவே, பன்னிரு வயது நிரம்பிய சிறுமியை நோக்கி ''எழுந்திடு'' என இயேசு கூறிய சொற்கள் நாம் இயேசுவின் வல்லமையால் ஒருநாள் உயிர்பெற்றெழுவோம் என்பதற்கு முன் அடையாளமாயிற்று. சிறுமியின் தந்தையிடம் இயேசு, ''அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' (மாற் 5:36) என்று கூறினார். கடவுளால் எல்லாம் நிறைவேற்ற முடியும் என நாம் உளமார நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். அப்போது இயேசு நமக்கு வாழ்வளிப்பார். நம்மைச் சாவிலிருந்து மீட்டு நாம் இறைவனோடு என்றென்றும் வாழ்கின்ற பேற்றினை நமக்கு அளிப்பார்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவும் அதனால் வாழ்வு பெறவும் அருள்தாரும்.