யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)
இன்று பொதுக்காலம் 3 ஆம் ஞாயிறுதிருவழிப்பாட்டு ஆண்டு B (25-01-2015)திருப்பலி முன்னுரை - 1
திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் என் இனிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி
ஆண்டவரின் அருள்பெற அணிதிரளும் உங்கள் அனைவருக்காகவும் பணிவுடன் இறைவனை வேண்டி நிற்கின்றேன்.
ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் வாரத்திலிருக்கும் நாம் இன்றைய திருப்பலி வழிபாட்டிலிருந்து இறைவன் முன் உலகோர்முன்
புதிய படைப்புக்களாக நிற்க வழிகாட்டப்படுகிறோம். மாறிவரும் உலகில் மாற்றங்கள் எங்கும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
இம்மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? வெறுமனே வெளிப்புறத்தில் மட்டும்தானா? அல்லது உள்ளார்ந்த முழுமாற்றமா? என்று இன்றைய பலியின் வழிகாட்டலில்
சிறப்பாக சிந்தித்து எத்தகைய இலக்குகளோடு மாற்றங்கள் நம்மில் நிகழவேண்டும்
எனும் நோக்கில் ஆய்வு செய்து தீர்மானங்கள் எடுத்து இன்றைய திருப்பலியில் நிறைவான பலன் பெற முயல்வோம்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே!
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட
இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
இயேசு அழைத்தபோது படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள்.
இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே.
இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார்.
பணம், பட்டம், பதவி, பேர், புகழ் இவைகளை விட்டுவிட்டு அவரை பின்தொடர விரும்புகின்றோமா?
நாம் எதில் நிறைவு காண்கின்றோம்? உலகச் செல்வத்திலா? இயேசுவிலா? உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம் வருந்துவோம்.
இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
நினிவே நகரத்து மக்கள் யோனாவின் வழியாக இறைவன் கூறிய வார்த்தைகளை கேட்டு உடனே மனம் வருந்தினார்கள்,
மனமாற்றம் அடைந்தார்கள். இறைவனும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்களை மன்னித்து அன்பு செய்தார்
என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.
ஓவ்வொரு நாளும் இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்முடன் பேசுகின்றார்.
அவரின் குரலுக்கு நம்முடைய பதில் என்ன என்பதை சிந்தித்தவர்களாக இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
அந்நாள்களில் இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார்.
அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்த குரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார்.
நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி
கொரிந்து நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை மறந்துவிட்டு உலகச் செல்வங்களில் அதிகம் பற்று உடையவர்களாகவும்,
அவற்றில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.
இதைக் கண்ட பவுலடியார் உலகச் செல்வங்களில் உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள் ஏனெனில் அவை நிலையானது அல்ல மாறாக
அழிந்துபோககூடியவை என்று கூறுகிறார்.
கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கவனம் எதன் பக்கம் இருக்கின்றது என்ற சிந்தனையுடன் இப்போது வாசிக்கப்படும் வாசகத்தை கேட்போம்.
அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது.
யோவான் கைதுசெய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ``காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.
]அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார்.
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
|
இன்றைய சிந்தனை
''காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது;
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று இயேசு கூறினார்'' (மாற்கு 1:15) மன்றாட்டு:இறைவா, உம் ஆட்சி வருக! |