இன்று திருக்குடும்பப் பெருவிழா

திருவழிப்பாட்டு ஆண்டு B (28-12-2014)

பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./> பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./> பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./> பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./> பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./> பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./> பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்./>


திருப்பலி முன்னுரை

இறைமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். கிறிஸ்து பிறப்புக்காலத்தில் வருகிற முதல் ஞாயிற்றுக் கிழமையாகிய ஆண்டவரின் நாள்: இன்று மீட்பராகப்பிறந்த இயேசு: தூய கன்னி மரியா: அவர் கணவரான தூய யோசேப்பு ஆகிய மூவரும் வாழ்ந்த குடும்ப வாழ்க்கை எத்தகைய மாண்புள்ள முறையில் அமைந்திருந்தது? அத்திருக் குடும்பத்தின் வழி நாம் பெறுகின்ற உயர்வான வாழ்க்கைப் பாடங்கள் என்ன என்ன? என்ற முறையில் நம்மையே ஆய்ந்தும் சிந்தித்தும் வாழத் தூண்டுகின்ற அன்புக் குடும்பத்தின் விழாவாக இன்று இந்த நாள் திரு அவையால் கொண்டாடப்படுகிறது.

இன்று நாம் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். நம்மை அழைத்து, அர்ச்சித்து குடும்பமாக ஒன்றிணைக்கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம். குடும்பம்: இறைவனின் மாபெரும் கொடை, இறையன்பின் இனிய வெளிப்பாடு, இறைவனோடு இணைந்து பணியாற்ற நமக்குக் கொடுக்கப்படும் ஓர் அழைப்பு. உண்மையான செப வாழ்வும், இறைவனின் வார்த்தைகளை வாழ்வாக்குவதுமே குடும்ப வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக்கும். அன்பு, பொறுமை, மன்னிப்பு, தூய வாழ்வு, புரிந்துணர்வு என்பவையே குடும்ப வாழ்வுக்கு உறுதியூட்டுபவையாகும். அவைதான் குடும்பத்தின் நற்பெயரை உருவாக்கும் தன்மையுடையவை. இறைவன் தான் வாக்களித்த அனைத்தையும் நமக்கென நிறைவேற்றுவார், இறை நம்பிக்கையோடு வாழ்பவர் நிட்சயமாக நிறைவடைவார். இவையே இன்றைய இறைவர்த்தைகள் ஊடாக நாம் பெற்றுக்கொள்ளும் இறைச் செய்தியாகும். எனவே நாம் நம்முடைய குடும்ப வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து, இறைவனுக்குகந்த குடும்பங்களாய் வாழவும், பிரிந்திருக்கும் குடும்பங்கள் ஒன்று சேரவும், குடும்பங்களுள் அமைதி நிலவவும் அருள் வேண்டிச் செபிப்பதோடு, இன்று நமக்குக் கூறப்படும் இறை மொழிகளை உள்ளத்தில் இருத்தி: இறைமக்களாக சிறப்பாக வாழ முயல்வோம் என்ற உணர்வுகளுடன் பலியில் ஒன்று சேர்வோம்.



முதல் வாசகம்

உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: �ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.'' அப்பொழுது ஆபிராம், �என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்'' என்றார். அதற்கு மறுமொழியாக, �இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்'' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, �வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்'' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு `ஈசாக்கு' என்று பெயரிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.
திருப்பாடல் 105: 1-2. 3-4. 5-6. 8-9

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். 6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகியோரின் நம்பிக்கை.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8,11-12,17-19

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். �ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்'' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், �ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்'' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். �ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை'' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, �ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை'' என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, �இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொள்ளும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தாங்கள் உமது அடிமை, நீர் விரும்புவதை நிறைவேற்றுவதே தங்கள் பணி என்பதை ஆழமாக உணரவும், நீர் அவர்களுக்கு வழங்கிய பணியை எச் சூழ்நிலையிலும் மனவுறுதியோடு நிறைவேற்றவும் அவர்களுக்கு தேவையான ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

குடும்பங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் இறை நம்பிக்கை, பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் எங்களை அணிசெய்து. ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு. நீர் எங்களை மன்னித்தது போல நாங்களும் மன்னித்து நற்செயல்களில் ஆர்வமுள்ள உமக்குரிய தூய குடும்பங்களாக வாழ்வு வரமருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்களித்த பெற்றோருக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்கள் பெற்றோரை மதித்து, அவர்களைப் புண்படுத்தாது, அவர்களை மேன்மைப்படுத்தி வாழ வேண்டிய அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆசியும், நல்வாழ்வும் தருகின்ற தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்பு ணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள்மீதும் மனமிரங்கி அவர்கள் உண்மையான மன மாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி திருக்குடும்பமாகிய அன்னை மரியா, தூய யோசேப்பு, இயேசு ஆகியேரைப் பின்பற்றி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரும்பெரும் செயல்கள் புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

உலக நாடுகளில் பெருகிவரும் பிரிவினைகளும், ஆணவமும், தன்னலமும், ஊழல்களும் ஒழிந்து மக்கள் அனைவரும் அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

கருணையின் தேவா!

எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும் , உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

உலக நாடு முழுவதும் பரவிவரும் பல்வேறுபட்ட கொடிய நோய்கள் இல்லாதொழியவும், இயற்கையாகவும், மனிதராலும் உருவாக்கப்படும் எல்லா அழிவுகளும் இல்லாது போகவும்: மக்கள் அனைவரும் உம்முடைய குரலுக்கே செவிகொடுத்து, உம்மைப் பின்பற்றி வாழவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்'' (லூக்கா 2:25)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சியை விவரிக்கின்ற லூக்கா சிமியோன் என்னும் நேர்மையாளர் பற்றியும் அன்னா என்னும் திருப்பணியாளர் (லூக் 2:37) பற்றியும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவர்கள்; கடவுளை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். இயேசு கோவிலுக்கு வந்ததும் இவர்கள் கடவுளின் திட்டம் இயேசுவில் நிறைவேறுவதைக் கண்டுகொள்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நேர்மையாளர்கள் வரிசையில் உயர்வாக எண்ணப்படுகின்ற சிமியோன், அன்னா ஆகிய இருவரும் யூத சமய அருள்நெறிக்குச் சீரிய எடுத்துக்காட்டுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். கடவுளின் வழி யாதெனக் கண்டு அதைக் கவனமாகக் கடைப்பிடிப்போர் அவருடைய அன்பிலும் அருளிலும் நிலைத்திருப்பார்கள். கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

சிமியோன் நேர்மையாளராக இருந்தார் என்பது அவருடைய வாழ்க்கை முறையில் துலங்கியது. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என சிமியோன் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையின் காரணமாக அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார். கடவுள் வாக்களித்த மீட்பு இயேசுவின் வழியாக நிறைவேறப் போகின்றது என்னும் உண்மை சிமியோனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நம் வாழ்க்கையில் கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை நாம் ஒவ்வொரு நாளும் காணலாம். கடவுளின் அன்புக் கரம் நம்மை வழிநடத்துவதை நாம் உணரலாம். நேர்மையான மன நிலையோடு கடவுளை அணுகுவோருக்கு அவருடைய ஆவி வாக்களிக்கப்படுகிறது. அந்த உறுதி நமக்கு இருப்பதால் நாமும் இறைப்பற்றுக் கொண்டு, இறைவழியில் தொடர்ந்து வழி நடக்க முன்வர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளம் நேர்மையாய் இருக்க அருள்தாரும்.