யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்துபிறப்புக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2014-12-27

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா




முதல் வாசகம்

நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த `நிலைவாழ்வு' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
திருப்பாடல்97: 1-2. 5-6. 11-12

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடு அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8)

இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியை யோவான் நற்செய்தியாளர் விவரிப்பதில் ஒரு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ''இயேசு அன்புசெய்த சீடர்'' பற்றியதாகும். இவரே இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு முதலில் வந்துசேர்ந்தார். ''கல்லறை;குள் சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவா 20:8). இயேசு இரா உணவு அருந்தியபோது இந்த ''அன்புச் சீடர்'' இயேசுவின் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார் (யோவா 13:21-23). இயேசு சிலுவையில் தொங்கியபோது இயேசுவின் தாய் மரியாவோடு இந்த அன்புச் சீடரும் அங்கே நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:26-27). இவ்வாறு இயேசுவின் தனிப்பட்ட அன்புக்குச் சொந்தக்காரரான சீடர் யார் என்னும் கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. இந்த அன்புச் சீடர் ஒரு தனிப்பட்ட ஆள் எனக் கருதாமல் இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்ற அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக அவரை நாம் கருதலாம் என்று ஓர் இறையியல் விளக்கம் உண்டு. இதைப் பெரும்பாலான அறிஞர் ஏற்கின்றனர். இவ்வாறு நாம் அன்புச் சீடரைப் புரிந்துகொண்டால் அவர் இயேசுவின் கல்லறைக்குள் ''சென்றார்''; ''கண்டார்''; ''நம்பினார்'' (யோவா 20:8) என்று தரப்படுகின்ற கூற்று இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் பொருந்தும். இயேசுவை மீட்பராக ஏற்கின்ற நாம் இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையானதைக் கண்டு அங்கே நுழைகின்றோம். அங்கே இயேசுவின் உடல் இல்லை என்பதையும் கல்லறை வெறுமையாய் உள்ளது என்பதையும் காண்கின்றோம். இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என நம்புகிறோம்.

இவ்வாறு இயேசு உயிர்பெற்ற நிகழ்ச்சியை நாம் ஏற்பது எதைக் குறிக்கிறது? முதலில், இயேசுவின் வாழ்வும் பணியும் செயல்பாடுகளும் கடவுளுக்கு உகந்தவையாய் இருந்தன என்பதை இயேசுவின் உயிர்த்தெழுதல் உறுதிப்படுத்துகிறது. அவருடைய வாழ்வும் சாவும் தோல்வியில் முடியவில்லை, மாறாக, அவர் வெற்றிவாகை சூடினார். கடவுள் உரைத்த சொல்லே அறுதியானதாக மாறிற்று. மேலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் நம் மீட்புக்கு வழிவகுத்தது. இயேசு உயிர்த்தெழாவிடின் நாம் இன்னும் பாவத்திலேயே இருப்போம் என தூய பவுல் கற்பிக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதல் நாம் புத்துயிர் பெறுவதற்கு ஒரு முன்னோடியாக அமைகிறது. இறுதியாக, உயிர்பெற்றெழுந்த இயேசுவே நம் நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கின்றார். அவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்னும் உண்மையின் அடிப்படையில் அவருடைய இளமைப் பருவம், பணி வாழ்வு ஆகியவற்றை நாம் ஒரு புது ஒளியில் காண்கின்றோம். நற்செய்தி நூல்கள் இப்பார்வையைப் பிரதிபலிக்கின்றன. கிறிஸ்துவின் வழியாகப் புத்துயிர் பெற்ற நாம் அதை நம் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை நமக்கு மீட்பராக அளித்த கடவுளை அன்புசெய்து, நம்மை அடுத்திருப்போரையும் அதே அன்போடு நாம் அரவணைக்கும்போது உண்மையிலேயே புது வாழ்வை நடைமுறையில் வெளிப்படுத்துவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து கிறிஸ்துவின் வழியாகப் புத்துயிர் பெற்ற நாங்கள் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்பட அருள்தாரும்.