யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-12-12




முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள்' என்றார்'' (லூக்கா 7:34)

இயேசுவிடம் குற்றம் கண்ட பரிசேயர் சதுசேயர் போன்ற யூத சமயத் தலைவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டதை இயேசு ஓர் உவமை வழி விளக்குகிறார். விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் நடுவே, மகிழ்ச்சியோடு நடனமாடுவதா துயரத்தோடு ஒப்பாரி வைப்பதா என்பதில் சண்டை. ஒருசிலர் நடனமாடுவோம் என்கிறார்கள், மற்றவர்களோ ஒப்பாரி வைப்போம் என்கிறார்கள் (காண்க: லூக் 7:31-32). இயேசுவின் எதிரிகளும் அவ்வாறே விவேகமற்ற விதத்தில் நடந்து கொள்கிறார்கள் என இயேசு சுட்டிக் காட்டுகிறார். திருமுழுக்கு யோவான் நோன்பிருந்தார் என்பதால் அவர் மக்களோடு கலந்து உறவாடவில்லை என்னும் குற்றச் சாட்டுக்கு ஆளாகிறார். இயேசுவோ மக்களை அணுகிச் சென்று அவர்களோடு சேர்ந்து உணவருந்தி, திராட்சை இரசம் பருகியதால் அவரைப் பெருந்தீனிக்காரன் என்றும் குடிகாரன் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் (லூக் 7:33-34). ஒருவர் செய்ததை மற்றவர் செய்யவில்லை என்பது குற்றச் சாட்டு. ஆக, உணவு உண்டாலும் குற்றம், உணவைத் துறந்தாலும் குற்றம் என்பது இயேசுவின் எதிரிகளின் பார்வை. அது மட்டுமல்ல, இயேசு சமுதாயத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களோடு கலந்து பழகினார் என்பதையும் குற்றமாகக் காட்டுகிறார்கள்.

வெளி அனுசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மையான மதிப்பீடுகளைப் புறக்கணித்த மனிதர்களைத் திருப்திப்படுத்த வரவில்லை இயேசு. அவர் மனிதரின் நலனை மேம்படுத்த வந்தார். அவர்களுக்கு முழுமையான விடுதலை வழங்க வந்தார். எனவே, அவர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களோடு உறவாடினார். கடவுள் யாரையும் வேறுபடுத்தி ஒதுக்குவதில்லை என்பதை இவ்வாறு இயேசு நடைமுறையில் எண்பித்தார். அதுபோலவே, கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துவிட்டதால் மனிதர் மகிழ்ச்சியோடு ஒருவர் ஒருவரோடு உறவாடுவது பொருத்தமே என்னும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் இயேசு. கடவுளின் அன்பும் இரக்கமும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய விருந்து. அந்த விருந்தை முன்னறிவிக்கும் விதத்தில் இயேசு விருந்துகளில் கலந்துகொண்டு மனித உறவுகளை முறைப்படுத்தினார். இன்றைய திருச்சபையும் கடவுளின் அன்பை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து ஆற்றிட வேண்டும். சமுதாயத்தில் நிலவுகின்ற ஏற்றத் தாழ்வுகள் மறைந்து, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் உண்மையைக் கருத்தளவிலும் செயலளவிலும் உலக மக்கள் ஏற்றிட இயேசுவின் சீடர்கள் துணிச்சலோடு உழைக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை அனைவரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.