யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-12-05




முதல் வாசகம்

ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல் 27: 1. 4. 13-14

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' (லூக்கா 9:9)

இயேசு கலிலேயாவில் ஊர் ஊராகச் சென்று நற்செய்தி அறிவித்தபோது புதுமைகள் பல நிகழ்த்தினார். அவரைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இயேசு யார் என்னும் கேள்விக்குப் பலரும் பல பதில்களைத் தந்தனர். ஏரோதுவின் ஆணைப்படி கொல்லப்பட்ட திருமுழுக்கு யோவான் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றுகூட மக்கள் இயேவைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததுண்டு. ஆனால் ஏரோது அப்படி நினைக்கவில்லை. அவன்தான் யோவானின் தலையைக் கொய்துவர ஆணையிட்டவனாயிற்றே. யோவான் இறந்தொழிந்தார் என்பது ஏரோதுவுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பேசிக்கொண்டது வேறு ஒருவரைப் பற்றித்தான் என்பது ஏரோதுவுக்குப் புரிந்தது. என்றாலும் அந்த மர்ம மனிதர் யார் என்பதை ஏரோது தெரிந்திருக்கவில்லை.

இயேசு யார் என நமக்குத் தெரியுமா? பலரும் இயேசு யார் என்பதைத் தெரிந்ததுபோல நினைத்துக்கொள்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எத்தனையோ மக்கள் இயேசுவை யார் என அடையாளம் தெரியாமலே வாழ்கின்றார்கள். இவர்களுள் கிறிஸ்தவரும் உண்டு, பிறரும் உண்டு. ''புதியது என்று உலகில் எதுவுமே இல்லை'' (காண்க: சபை உரையாளர் 1:9) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இவர்கள் ஏற்கெனவே யாவும் தெரிந்தவர்களாகத் தம்மைப் பற்றியே நினைத்துக்கொள்வதால் இயேசுவைப் பற்றி ஆழ்ந்த அனுபவ அறிவைப் பெற முயற்சிசெய்வதில்லை. நாம் ஒவ்வொருவரும் புதிய பார்வை பெற வேண்டும்; புதிய இதயம் கொண்டிருக்க வேண்டும்; அப்போது என்றுமே புதிதாகத் துலங்கி ஒளிர்கின்ற நற்செய்தியைப் புது முறையில் ஒவ்வொரு நாளும் அணுகுவோம். இவ்விதத்தில் இயேசு யார் என்பதை மேன்மேலும் ஆழமாக நம்மால் உணர்ந்தறிய இயலும். திறந்த உள்ளம் இருந்தால் கடவுளின் வெளிப்பாடு அங்கே நிகழுமன்றோ!

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தியாக வந்த இயேசுவின் ஒளி புதுப்புது வண்ணங்களில் எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் துலங்கிட அருள்தாரும்.