யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் புதன்கிழமை
2014-10-29




முதல் வாசகம்

மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9

பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. ``உன் தந்தையையும் தாயையும் மதித்து நட'' என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. ``இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்'' என்பதே அவ்வாக்குறுதி. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழு மனத்தோடும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாய் இராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்.
திருப்பாடல் 145: 10-11. 12-13. 13-14

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

13ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ``ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ``இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், `நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

விருந்துக்கு வழி .. இடுக்கமான வாயில்

இடுக்கமான வாயில் வழியாக நுழையுங்கள் என்று சொன்னால் இன்று நம்மை பைத்தியக்காரன் என்று சிறு பிள்ளையும் சொல்லும். ஆனால் இயேசு அன்றைக்குச் சொன்னபோது யாரும் அதை மறுக்கவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு காரணம் இருக்கு.

எருசலேம் நெருங்கி வரும்போது இயேசு இதைச் சொல்லுகிறார். எருசலேம் மிக முக்கிய நகரம். ஆன்மீகத்திலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் சிறந்திருந்தது.மக்கள் போக்குவரத்து இந்த நகருக்கு அதிகம். ஆகவே பாதுகாப்பும் அதிகம்.சுற்றிலும் சுற்றுச் சுவர்,பெரிய நுளை வாயில்,பாதுகாப்பு வளையம், காவலர், காவல் மாடம் இப்படி பலவற்றை பெரிய வாயில் வழியாகச் செல்வோர் சந்திக்க வேண்டியிருப்பதால் பயணம் தடைபடும்.சில சமயங்களில் கதவு மூடப்பட்டுவிட்டால் பயணமே நின்றுவிடும்.நகருக்குள் நுழையமுடியாது. உயிருக்கும் ஆபத்தாகிவிடும்.இத்தகைய சிரமங்கள் இல்லாமல் வீடு வந்து சேர்ந்துவிடலாம், இடுக்கமான வாயில் வழியாக நுழைந்து வந்தால். நுழையும்போது கஷ்டப்பட வேண்டும்.நிறைய வசதிகள் இருக்காது.ஆனால் உறுதியாக வீடு வந்து சேரலாம்.

இந்த அன்றாட அனுபவத்தை ஆன்மீக வாழ்வுக்கும் பொருத்தி போதித்தார். கொஞ்சம் தான தர்மம், நற்செயல்கள், தியாகங்கள், ஒறுத்தல்கள்,செபம் இப்படி செய்து வந்தால் நீங்கள் இடுக்கமான வாயில வழியான நுழைகிறீர்கள் என்று பொருள். நீங்கள் இறையரசின் திருவிருந்தில் இயேசுவோடு அமர்வீர்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் செய்தியை உலகுக்கு அறிவிக்க எங்களுக்கு ஆற்றல் அளித்தருளும்.