யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-10-28

புனிதர்கள் சீமோன், யூதா - திருத்தூதர்கள் விழா




முதல் வாசகம்

திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல்19: 1-2. 3-4

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''விடிந்ததும் இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்'' (லூக்கா 6:13)

''பன்னிரு திருத்தூதர்'' இயேசுவோடு மிக நெருக்கமான உறவில் ஒன்றித்திருந்த சீடர்கள் ஆவர். இப்பன்னிருவரும் ''அப்போஸ்தலர்'' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தொலோஸ்'' என்றால் ''அனுப்பப்பட்டவர்'', ''தூதர்'' என்பது பொருள். இவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்பதை நற்செய்தி ஆசிரியர்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதாவது, ''தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரையும் நியமித்தார்'' (மாற் 3:14-15). லூக்காவும் மாற்கும் இச்செய்தியை விவரிக்கும்போது ''இயேசு ஒரு மலைக்குப் போனார்'' என்றும், அப்போது பன்னிருவரையும் திருத்தூதர்களாக ஏற்படுத்தினார் எனவும் குறிப்பிடுகின்றனர் (மாற் 3:13; லூக் 6:12). அது மட்டுமன்று, இயேசு ''மலைக்குப் போய் அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' எனவும் லூக்கா எழுதுகிறார் (லூக் 13:12). ''மலை'' என்னும் உருவகம் விவிலிய வழக்கில் சிறப்பான பொருளுடைத்தது. எடுத்துக்காட்டாக, எரிந்துகொண்டிருந்த முட்புதரின் நடுவே கடவுளின் பிரசன்னத்தை மோசே உணர்ந்து அனுபவித்தது ஓரேபு என்னும் மலையில் (விப 3:1-6); இஸ்ரயேல் மக்களோடு கடவுள் உடன்படிக்கை செய்துகொண்டது சீனாய் என்னும் ''மலை''யில் நிகழ்ந்தது; அதே மலையில்தான் மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று அதை மக்களுக்கு அறிவித்தார் (விப 19:20-25; 20:1-21). மேலும் இயேசு மலைமீது உருமாற்றமடைந்த போதும் (மத் 17:1-9) ஒலிவ மலையில் துன்புற்ற போதும் தம்மோடு சில திருத்தூதர்களை அழைத்துச் சென்றிருந்தார் (லூக் 22-39:42). ஆக, ''மலை'' என்னும் உருவகத்தின் வழியாக நற்செய்தி ஆசிரியர்கள் உணர்த்துகின்ற கருத்து இது: இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாக ஏற்படுத்திய நிகழ்ச்சி கடவுளின் திட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. கடவுளின் உடனிருப்பு அந்த நிகழ்ச்சியில் தோன்றுகிறது. முற்காலத்தில் பன்னிரு குலத்தலைவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு அடித்தளம் போல அமைந்தார்கள். அதுபோல, புதிய உடன்படிக்கையின்போது பன்னிரு திருத்தூதர்கள் இயேசு உருவாக்குகின்ற புதிய சமூகத்திற்குத் அடித்தளம் போல அமைவார்கள்.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் இயேசு தாம் தேர்ந்துகொண்ட பன்னிருவருக்கும் ''திருத்தூதர் என்று பெயரிட்டார்'' என்னும் செய்தியாகும். மண்ணையும் விண்ணையும் படைத்த கடவுள் படைப்புப் பொருள்களுக்குப் ''பெயரிட்டார்'' என்னும் செய்தி தொடக்க நூலில் உண்டு (தொநூ 1:3-10). அவை அனைத்தும் அவருடைய உடைமைகள். விலங்குகளுக்குப் ''பெயரிடும்'' பொறுப்பைக் கடவுள் ஆதாமுக்குக் கொடுத்த போது முதல் மனிதர்கள் கடவுளின் வல்லமையில் பங்கேற்று, படைப்புப் பொருள்களை ஆண்டு நடத்தும் பொறுப்பையும் பெற்றார்கள் (தொநூ 2:20). அதுபோலவே, இயேசு பன்னிருவருக்குத் ''திருத்தூதர் என்று பெயரிட்ட'' நிகழ்ச்சியிலிருந்து அவர்களுக்குத் தம் அதிகாரத்தையும் ஆற்றலையும் பகிர்ந்தளிக்கின்றார் என நாம் அறிகிறோம். திருச்சபையின் பண்புகளில் ஒன்று அதன் ''திருத்தூது இயல்பு'' ஆகும். அதாவது, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களை இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க அழைக்கும் பொறுப்பைப் பன்னிரு திருத்தூதர்களும் பெற்றது போல, கிறிஸ்துவின் பெயரால் கூடிவருகின்ற திருச்சபையும் இயேசு பற்றிய ''தூது அறிவிக்க'' அனுப்பப்பட்டுள்ளது. நாம் நற்செய்தியின் ''தூதுவர்களாக'' முழு மூச்சுடன் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பின் செய்தியை உலகுக்கு அறிவிக்க எங்களுக்கு ஆற்றல் அளித்தருளும்.