யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் திங்கட்கிழமை
2014-10-27




முதல் வாசகம்

கிறிஸ்து அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32 - 5: 8

சகோதரர் சகோதரிகளே, ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். பரத்தைமை, அனைத்து ஒழுக்கக் கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர்கூட உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை. அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும். ஏனெனில் பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப்பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள்மீது கடவுளின் சினம் வருகின்றது. எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்குகொள்ள வேண்டாம். ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீங்கள் கடவுளின் பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, ``அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்'' என்றார். ஆண்டவரோ அவரைப் பார்த்து, ``வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?'' என்று கேட்டார். அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்'' (லூக்கா 12:7)

விவிலியத்தில் பல இடங்களில் ''அஞ்சாதீர்கள்'' என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ''எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்'' என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு. அவர்தான் நம்மை அன்புசெய்கின்ற கடவுள்.

கடவுளுக்கு அஞ்சி நாம் நடக்கவேண்டும் என்றதும் கடவுள் நம்மைத் தண்டிக்கப்போகிறார் என்னும் எண்ணத்தால் நாம் பயந்து நடுங்க வேண்டும் என்று சிலர் தவறாகப் பொருள்புரிந்துகொள்வது உண்டு. கடவுள் நம்மைத் தண்டிக்கக் காத்திருக்கும் ''நீதிபதி'' அல்ல; மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவேதான், சிட்டுக் குருவிகளைக் காக்கின்ற கடவுள் நம்மைக் காக்காமல் கைவிடமாட்டார் என இயேசு அறிவுறுத்துகிறார். கடவுளின் பராமரிப்பும் காவலும் நமக்கு என்றுமே உண்டு என்னும் உணர்வு நம்மில் வளர்ந்து வேரூயஅp;ன்ற வேண்டும். அப்போது நமக்கு ஏற்படுகின்ற அல்லது ஏற்படக்கூடும் என நாம் நினைக்கின்ற தீமைகள் குறித்து நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் கடவுளை முழுமையாக நம்பி நாம் வாழ்ந்தால் நமக்குத் தீமைகள் ஏற்பட்டாலும் அவை நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்போது தீமையை எதிர்த்து நாம் போராடவும், நன்மை செய்வதன் வழியாகத் தீமையை வென்றிடவும் கடவுள் நமக்கு வல்லமை தருவார். எதைக் கண்டும் அஞ்சாத உள்ளம் நம்மில் உருவானால் நாமும் பிறருக்குத் துணிவூட்டுகின்ற மனிதராக மாறுவோம். சாதாரண சிட்டுக்குருவியைப் பாதுகாக்கின்ற கடவுளின் பார்வையில் மண்வாழ் மனிதார் மாபெரும் மாண்புமிக்கவர் என்னும் உண்மையை நம் வாழ்வின் வழியாகப் பறைசாற்றுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்திலிருந்து அச்ச உணர்வை அகற்றி உம்மையே நாங்கள் பற்றுக்கோடாகக் கொள்ள அருள்தாரும்.