பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறு


திருவழிப்பாட்டு ஆண்டு A (19-10-2014)

சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்/> சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்/> சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்/> சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்/> சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்/>


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க இறைத்தந்தைக்கும், இறைச்சமுகத்திற்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்; இனிய வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறை நம் தாயாம் திருச்சபையோடு கொண்டாடுகின்றோம்.

உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! சாவை ஒழித்து, மாட்சிமிக்கவரும்: பெரிதும் போற்றத் தக்கவரும்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவருமான நம் ஆண்டவரின் திருப்பாதத்தில் ஒன்று கூடியுள்ளோம். நாம் அனைவரும் தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்ந்து, வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொண்டு. உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்க வேண்டுமென இறைவன் விரும்புகின்றார். அதற்கான ஆற்றலையும், வலிமையையும் அவரே தருகின்றார். அத்தோடு நாம் இறைவனுக்குரியதை அவருக்குக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு ஆழமான அறிவுறுத்தலும் நமக்குக் கொடுக்கப்படுகின்றது. இந்தச் சிந்தனைகளை உள் வாங்கிய நாம், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொண்டு, தூய உள்ளத்துடன் ஆண்டவரை வழிபட்டு, உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்கி, 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்: அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார் என்னும் உண்மையை நம் வாழ்வால் எடுத்துரைத்து, ஆண்டவரை மாட்சிமைப்படுத்த வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பாமல் இருந்ததால் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டுத் துன்புற்றனர். கடவுளோ சைரசு என்னும் மன்னரை ஆட்சியாளராக உயர்த்தி, அவர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை வழங்கினார். எசாயா வழங்குகின்ற இவ்விளக்கம் அவர் கடவுளிடத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. அதே நம்பிக்கை நம்மிடமும் துலங்க வேண்டும் என்ற உறுதியுடன் இவ்வாசகத்தைக் கேட்போம்

சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6

சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
திருப்பாடல் 96: 1,3. 4-5. 7-8. 9-10

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

4 ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. 5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். பல்லவி

9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்துகொள்வோர் நற்செய்தியின் வல்லமையால் புத்துணர்வு கொண்டவர்களாகச் செயல்பட வேண்டும்; தங்கள் வாழ்வாலும் பணியாலும் நற்செய்திக்குச் சான்றுபகர்ந்து, பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுரைத்துவதை கேட்போம்.

உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், உங்கள் மனவுறுதியையும் நினைவுகூருகிறோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21

அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்'' என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, ``வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள், ``சீசருடையவை'' என்றார்கள். அதற்கு அவர், ``ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்:

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நல் வழியைக் கற்பித்து, நேரிய வழியில் நடாத்தும் அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை அவர்களும் கொண்டு, தமது பணிப்பொறுப்புக்களில் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

வதிட அனுமதிக்காக இந்நாடுகளில் ஏங்கிக்கொண்டிருக்கும் அனைவரும் நிலையான வதிவிட அனுமதியைப் பெற்று மகிழ்ச்சியோடும் வாழச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உன்னதரான தந்தையே இறைவா!

உமது வாழ்வுதரும் வார்த்தைகளைத் திரிவுபடுத்தி, தவறான விளக்கங்களைக் கொடுத்து, பிரிவினைகளோடும் பிளவுகளோடும் வாழும் அனைவரும் உமக்குள் ஒன்றுபட்டு இறையரைசைக் கட்டியெழுப்பிடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

உலகில் பசியாலும், பட்டியினாலும், நோயினாலும், அன்பின்மையினாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைத்துக் குழந்தைகளையும் ஆசீர்வதித்து அவர்களது தேவைகளை நிறைவுசெய்து அவர்களைப் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு ஏரோதியரை நோக்கி, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்றார்'' (மாற்கு 12:17)

சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்னும் கேள்வியை இயேசுவிடம் கேட்டவர்கள் அவரைப் ''பேச்சில் சிக்கவைக்க'' முயன்றனர். அவர்களுடைய உள்ளத்தில் நேர்மை இல்லை. ஆனால் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொள்கிறார். அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்கிறார். ''சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுப்பதே முறை'' என்று இயேசு கூறியதைப் புரிந்துகொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ''சீசர்'' என்றால் இவ்வுலக ஆட்சியாளர்களையும் நாட்டுத் தலைவர்களையும் குறிக்கும் என்று பொருள்கொண்டு, இவ்வுலகு சார்ந்த காரியங்களுக்கும் கடவுள் சார்ந்த காரியங்களுக்கும் இடையே உறவு கிடையாது என்றும், அவற்றிற்கிடையே நிலவுகின்ற வேறுபாட்டை நாம் போக்க இயலாது என்றும் முடிவுசெய்கின்றனர். இவர்கள் உலகு சார்ந்த காரியங்களாக அரசியல், சமூக அமைப்பு, கலாச்சாரப் பாணிகள் போன்றவற்றைக் கருதுவர். இவற்றிற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனவும், சமயக் கருத்துக்களின் அடிப்படையில் உலக அமைப்பை மாற்றியமைக்க முயல்வது முறையற்றது எனவும் வாதாடுவர். ஆனால் இயேசு இப்பொருளில் பேசவில்லை. அவர் ''சீசருக்கு உரியது'' எனக் குறிப்பிட்டது அவரிடம் காட்டப்பட்ட தெனாரியம் என்னும் வெள்ளி நாணயத்தை. அதில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. யாருடைய உருவம் நாணயத்தில் உள்ளதோ அவரே அந்நாணயத்தை உருவாக்கியவர் என்னும் முறையில் அதற்கு உரிமையாளர் என இயேசு முடிவுசெய்கிறார். எனவே, சீசருக்கு வரிசெலுத்துவது சீசருக்கு உரியதைத் திருப்பிக் கொடுப்பதே ஆகும். இதைக் கூறியபின் இயேசு ''கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்'' என்றார்.

இங்கே இயேசு ஆழ்ந்ததோர் உண்மையை அறிவிக்கிறார். சீசரின் உருவம் இருந்தது நாணயத்தில்; ஆனால் கடவுளின் ''உருவமும் சாயலும்'' இருப்பது மனிதரில். ஏனென்றால் கடவுள் மனிதரைத் தம் சாயலிலும் உருவிலும் உருவாக்கினார்; அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் (காண்க: தொநூ 1:27). எனவே, மனிதர் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் கடவுள் ஒருவருக்கே பணிந்து நடக்கக் கடமைப்பட்டவர்கள். இவ்வுலக அதிகாரம் மனிதரை அடிமைப்படுத்துவதும் அடக்கியாளுவதும் தவறு. இந்த உண்மையை இயேசு அழகாக எடுத்துரைத்தார். இன்று நாம் மனிதரில் கடவுளின் சாயலலைக் காண்பது அவர்களுடைய மாண்பை நாம் மதிப்பதில் அடங்கும். மனிதர் மனிதரை அடிமைகளாவோ தங்கள் சொத்தாகவோ கருதுவது முறையன்று. நாம் அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள் என்னும் முறையில் கடவுளையே நம் கதியாக ஏற்றிட வேண்டும். அப்போது பிறருடைய மாண்பினைப் போற்றி ஏற்றிட நாம் முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் அனைவரையும் உம் சாயலில் படைத்துள்ளீர் என நாங்கள் உணர்ந்து மனித மாண்பை மதித்திட அருள்தாரும்.