யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் புதன்கிழமை
2014-10-15

புனித தெரேசா (அவிலா நகர்)




முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46

அக்காலத்தில் இயேசு கூறியது: ``ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது. ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.'' திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்'' என்றார். அதற்கு அவர், ``ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்'' (லூக்கா 11:42)

சில கிறிஸ்தவ சபைகளில் ''பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கின்ற'' வழக்கம் உண்டு. இதற்கு அடிப்படை லேவியர் நூலில் உள்ளது: ''நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது'' (லேவி 27:30). கடவுளிடமிருந்து நாம் அனைத்தையுமே கொடையாகப் பெறுகின்றோம். எனவே, கடவுளுக்கென நாம் ஒரு பகுதியைக் காணிக்கையாகக் கொடுப்பது பொருத்தமே. இயேசு அக்காலத்தில் நிலவிய இப்பழக்கத்தைக் கண்டித்தார் என்பதற்கில்லை. மாறாக, கடவுளுக்குக் காணிக்கை கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாமல், கடவுளின் அன்பில் நிலைத்திராமல் வாழ்வது முன்னுக்குப்பின்முரணாக உள்ளது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் (லூக்கா 11:42).

கடவுளுக்குக் கொடுக்கப்படுகின்ற காணிக்கை கடவுளின் புகழுக்காகவும், கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்வர். எனினும், பத்திலொரு பங்கைக் காணிக்கையாக்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல. கட்டாயத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது உண்மையான கொடை என்று சொல்ல முடியாது. உளமார உவந்து வழங்குவதே உண்மையான கொடை, அன்பளிப்பு. கடவுளிடமிருந்து நாம் கொடையாகப் பெற்றவற்றை மக்களின் நலனுக்காகக் கொடுக்கும்போது கடவுளுக்கே நாம் புகழ் செலுத்துகிறோம். மனிதரின் பொருள்கொடை கடவுளுக்குத் தேவையல்ல; ஆனால், நம் உள்ளத்தில் அவரை உண்மையாக ஏற்று வழிபடுகின்ற செயலே நாம் அவருக்கு அளிக்கின்ற மேலான கொடை. அதுபோலவே, கடவுளின் அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதும் கடவுளுக்கு விருப்பமானதாகும். எனவே, ''நீதியையும் கடவுளின் அன்பையும் கடைப்பிடிக்க'' நாம் அழைக்கப்படுகிறோம் (காண்க: லூக்கா 11:42)

மன்றாட்டு:

இறைவா, பொருளை அல்ல எங்கள் இதயத்தையே நீர் கேட்கிறீர் என உணர்ந்து எங்களையே உமக்குக் கையளிக்க அருள்தாரும்.