யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-10-10




முதல் வாசகம்

ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-17

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல், ``உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர். திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், ``திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!'' என்று எழுதியுள்ளது. சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், ``நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.'' திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, ``சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்'' என்று எழுதியுள்ளது. ``மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்'' என்று எழுதி உள்ளவாறு, நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும், வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 111: 1-2. 3-4. 5-6

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, ``பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: ``தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், `நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அவர்களுள் சிலர், 'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்'' (லூக்கா 11:15-16)

இயேசு புரிந்த புதுமைகள் அதிசயமான செயல்களாக மக்களுக்குத் தெரிந்தன. அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிய விதத்தில் இயேசு செயல்பட்டதால் ஒருசிலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அவர்கள் எனவே ''பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார்'' என முடிவுசெய்தனர் (காண்க: லூக் 11:15). கடவுளின் வல்லமை இயேசு வழியாக வெளிப்பட்டது என ஏற்றுக்கொண்டால் இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியிருக்கும். ஆனால் கடவுளின் வல்லமைக்கு எதிராகச் செயல்படுகின்ற தீய ஆவிகளின் உதவியோடு இயேசு செயல்பட்டார் என முடிவுசெய்துவிட்டால் கடவுளாட்சி பற்றி இயேசு அறிவித்த செய்தியையும் ஏற்கவேண்டியதில்லை.

இவ்வாறு நினைத்தவர்கள் இயேசுவிடமிருந்து ''வேறு அடையாளம்'' எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். அந்த அடையாளம் ''வானத்திலிருந்து'' வரவேண்டும் எனவும் கேட்டார்கள் (காண்க: லூக் 11:6). இயேசுவின் போதனையை ஏற்கமுடியாது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு அவர் எவ்வளவு பெரிய அடையாளத்தைக் காட்டினாலும் அவருடைய எதிரிகள் நிறைவடைய மாட்டார்கள். இயேசுவை ஏற்க வேண்டும் என்றால் நம் உள்ளம் அடைபட்டிராமல் திறந்த நிலையில் இருக்கவேண்டும். நம் பார்வையில் நேர்மை வேண்டும். நம் இதயக் கதவுகளை மூடிவிட்ட பிறகு அங்கே கடவுளின் செயல் தோன்றட்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு கானல்நீர் போல மறைந்துபோகும். மாறாக, நம் உள்ளத்தில் கடவுளின் அருள் துலங்கிச் செயல்படும் வண்ணம் நம்மையே அவரிடத்தில் கையளித்துவிட்டால் நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும். கடவுளின் வல்லமை நம் வழியாகவும் வெளிப்படும். ஏனென்றால் கடவுள் மனிதரின் துணையோடுதான் தம் திட்டத்தைச் செயல்படுத்துகின்றார். கடவுளின் செயலை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் கண்டுகொள்ளவும், அதன் ஒளியில் புது மனிதர்களாக உருமாற்றம் அடையவும் வேண்டுமென்றால் கடவுளின் கைகளில் நம்மை முழுமையாகக் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமை எங்கள் வாழ்வில் துலங்குவதைக் கண்டுகொள்ள எங்களுக்கு அருள்தாரும்.