யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் சனிக்கிழமை
2014-09-27

புனித வின்சன்ட் டிபோல்




முதல் வாசகம்

கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9 -12: 8

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ``வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே'' என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்'' (மத்தேயு 17:22)

இயேசு தம்மைக் குறிக்கப் பயன்படுத்திய பெயர்களில் முக்கியமான ஒன்று ''மானிட மகன்'' என்பதாகும். யார் இந்த மானிட மகன்? இதற்கு விவிலிய அடிப்படை என்ன? மானிட மகன் என்னும்போது ''மனிதர்'' எனப் பொதுவாகப் பொருள்கொள்ளலாம். இயேசு எல்லா மனிதருக்கும் பிரதிநிதிபோல இவ்வுலகில் வந்ததால் அவர் அனைவருக்கும் மேலான ''மானிட மகன்''. பழைய ஏற்பாட்டில் மானிட மகன் பற்றிய குறிப்புகள் யோபு (16:21; 25:6), திருப்பாடல்கள் (8:4; 80:17; 114:3), எசேக்கியேல் (2:1-8), தானியேல் (17:13) போன்ற நூல்களிலும், புதிய ஏற்பாட்டில் மத்தேயு (8:20; 12:38-42) முதலிய நற்செய்தி நூல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ விளக்கத்தின்படி, இயேசு தம்மை ''மானிட மகன்'' எனக் குறிப்பிட்டது பெரும்பாலும் தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் இறந்து, புத்துயிர் பெற்று எழுவதை விளக்கவே. மானிட மகன் என்பவர் துன்புறும் மெசியா. அவரே இயேசு.

அதே நேரத்தில், இயேசு மனிதரோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டதால் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை மனிதரின் வாழ்விலும் நிகழ்கின்றன. குறிப்பாக, மானிட வாழ்க்கையில் சிலுவைக்கு இடம் உண்டு; உயிர்த்தெழலுக்கும் இடம் உண்டு. இவ்வாறு நம்மைத் தம்மோடு ஒன்றித்துக்கொள்கின்ற இயேசு நம் துன்ப வேளைகளில் நமக்குத் துணையாக வருகிறார். நாம் அவருடைய துன்பங்களில் பங்கேற்கும்போது அவரும் நம் துன்பங்களில் பங்கேற்கிறார் என்பது ஓர் முரணான உண்மை. எனவே இயேசுவின் சீடர் துயரமடையத் தேவையில்லை. சிலுவை வழியாக நமக்குப் புது வாழ்வு பிறந்தது என்பது குறித்து நாம் மகிழ வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவோடு நாங்கள் துன்ப வேளையிலும் இணைந்திருக்க அருள்தாரும்.