யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் புதன்கிழமை
2014-09-24




முதல் வாசகம்

எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 30: 5-9

கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாய் இருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யன் ஆவாய்; அவர் உன்னைக் கடிந்து கொள்வார். வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும். வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், ``உம்மை எனக்குத் தெரியாது'' என்று மறுதலித்து, ``ஆண்டவரைக் கண்டது யார்?'' என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
திருப்பாடல் 119: 29,72. 89,101. 104,163

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. பல்லவி

89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. 101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். பல்லவி

104 உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய் வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன் 163 பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறி விட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, ... இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்|| (லூக்கா 9:1-2)

கொள்கை நோக்கு கொண்டவர்களாக அவர்களை அனுப்பினார். கிறிஸ்தவர்கள் கொள்கை நோக்கு கொண்டவர்களாக வாழ்ந்திடல் வேண்டும். ஏனோதானோ என்ற வாழ்வு கிறிஸ்தவ வாழ்வு இல்லை. எப்படியோ வாழ்ந்து போவதும் கிறிஸ்தவ வாழ்வு இல்லை. குறிக்கோளோடு பயணிப்பதுவே கிறிஸ்தவ வாழ்வாகும.; நமக்கு என்று தனிப்பட்ட குறிக்கோளும் கொண்டிட முடியாது. நாம் அவருடைய கொள்கையின் அடிப்படையில் தான் தேவையின் அடிப்படையில், காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையிலும் பணிகள் அமைவது நல்லது. அதுவே உகந்தது. சிறப்புடையதாகவும் அமைந்திட முடியும். வல்லமையும், அதிகாரமும் கொண்டவர்களாகவே நம்மை ஆசீர்வதித்து இருக்கின்றார். வல்லமையை பிறர் நலனுக்காகவும், அதிகாரத்தை நெறிப்படுத்திடவும் பயன்படுத்துவது அறிவார்ந்த செயலாகும். மாறாக தவறாக பயன்படுத்திட முற்படும் போது, கிறிஸ்தவத்தை தளர்ச்சியடைய செய்வதோடு, தவறான மாதிரிகையை பதிவு செய்கின்றோம் என்பதை உணர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் செயல்பட அருள்தாரும்.