யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் திங்கட்கிழமை
2014-09-08

தூய கன்னி மரியாவின் பிறப்பு




முதல் வாசகம்

இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5

ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள் வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
திருப்பாடல்13: 5. 6

நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். பல்லவி

6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். ``இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஆண்டவரின் தூதர், 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்...' என்றார்'' (மத்தேயு 1:20-21)

இயேசு என்னும் பெயர் எபிரேய மொழியில் ''யோசுவா'' என்பதாகும். அதற்கு ''யாவே மீட்கிறார்'' என்பது பொருள். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மைப் பாவத்திலிருந்தும் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிக்கிறார். நமக்கு விடுதலையும் மீட்பும் வழங்குகின்ற இயேசுவை உலகில் மனிதராகப் பெற்றளித்த அன்னை மரியாவை நாம் மனதாரப் போற்றிப் புகழ்வது பொருத்தமே. இயேசு உண்மையிலேயே கடவுளும் மனிதரும் ஆவார். இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்வது நம் குறுகிய அறிவுத் திறனுக்கு அப்பாற்பட்டது. ஆனால் கடவுள் நமக்கு இந்த உண்மையை இயேசு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாமும் கடவுளின் வார்த்தையை நம்பி அந்த உண்மையை ஏற்கிறோம். மனிதராகப் பிறந்த இயேசுவின் ''மூதாதையர் பட்டியல்'' மத்தேயு நற்செய்தியின் தொடக்கமாக அமைந்துள்ளது. நம் காதுகளில் விசித்திரமாக ஒலிக்கின்ற பெயர்களைக் கொண்ட இந்த நீண்ட பட்டியலை மத்தேயு பதிவு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதாவது, இயேசு உண்மையிலேயே தாவீதின் வழித்தோன்றலாக வந்து பிறந்தார் என்பதை மத்தேயு நிலைநாட்டுகிறார். அக்கால வழக்கப்படி, ஆண்களின் குல வரிசை மட்டுமே தரப்பட்டுள்ளது. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு தாவீதின் வழி வந்தவர். எனவே, சட்ட முறைப்படி யோசேப்பு இயேசுவின் தந்தையாகக் கருதப்பட்டார். ஆயினும் இயேசு உண்மையிலேயே தூய ஆவியின் வல்லமையால் மரியாவின் வயிற்றில் கருவாக உருவானார் என மத்தேயு குறிக்கின்றார். கடவுளின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ''யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'' என அறிவிக்கின்றார் (மத் 1:20).

மரியா இயேசுவின் தாய். அதே நேரத்தில் இறைவன் மரியாவைக் கன்னிமை குன்றாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. எனவே, மரியாவுக்குச் சிறப்பு வணக்கம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. இந்த வணக்கம் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனைக்கு நிகராகாது. ஏனென்றால் கடவுள் நம்மைப் படைத்துக் காத்து, நம்மைப் பாவத்திலிருந்து மீட்கின்றவர். அவரிடமிருந்தே நாம் புறப்படுகிறோம்; அவரை நோக்கியே நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது; அவரே நம் இறுதி கதியாக இருப்பவர். இத்தகைய வல்லமை மிக்க கடவுள் மரியாவைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தார்; அவரைத் தம் திருமகனின் தாயாக நியமித்தார். மரியாவும் இறைத்திட்டத்திற்கு ஏற்ப தம்மையே முழுமையாக இறைவனிடம் கையளித்தார். இவ்வாறு நமக்கு ஓர் முன் உதாரணமானார். இயேசுவின் தாய் நம் தாயாகவும் இருக்கிறார். அதாவது, இயேசுவை நம்பி ஏற்போரை உள்ளடக்கிய சமூகமாகிய திருச்சபைக்கு அன்னை அவர். மரியாவுக்குக் கடவுள் அளித்த மாட்சியையும் மகிமையையும் நமக்கும் வாக்களிக்கின்ற கடவுள் தம் திருமகன் இயேசு வழியாக நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கின்றார். இந்த உண்மையை மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இறுதியிலும் நாம் காண்கின்றோம். அவரே ''இம்மானுவேல்'' (''கடவுள் நம்மோடு இருக்கிறார்'' என்பது அதன் பொருள் - மத் 1:23). ''இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என அவர் நமக்கு வாக்களித்துள்ளார் (காண்க: மத் 28:20).

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களோடு எந்நாளும் தங்கியிருக்கும் அருள்செயலுக்கு நன்றி!