யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் சனிக்கிழமை
2014-09-06




முதல் வாசகம்

பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15

சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், ``எழுதியுள்ளதற்கு மேல் போகாதே'' என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே. கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன். நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம். உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
திருப்பாடல்145: 17-18. 19-20. 21

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். 20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். பல்லவி

21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், ``ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு மறுமொழியாக, ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்று கூறினார். மேலும் அவர்களிடம், ``ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்'' (லூக்கா 6:1)

ஓய்வு நாளில் எந்தெந்த வேலைகள் அனுமதிக்கப்படவில்லை என்னும் பட்டியல் மிக நீண்டது. முப்பத்தொன்பது வகையான வேலைகள் ஓய்வு நாளில் செய்யத் தகாதவை என்று சட்டம். அறுவடை செய்தல், தானியத்தைப் பிரித்தெடுத்தல், உணவு தயாரித்தல் என்னும் வேலைகள் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இயேசுவின் சீடர்கள் அவற்றை மீறி, ''கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்'' (லூக் 6:1). ''ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு'' (காண்க: விப 20:8-11) என்னும் சட்டம் கடவுள் மோசே வழியாகக் கொடுத்த கற்பனைகளில் முக்கியமான ஒன்று. இக்கட்டளை பொதுவான ஒன்றாக இருந்ததால் அதற்கு விளக்கங்கள் பல எழுந்தன. ஓய்வு நாளைத் ''தூயதாகக் கடைப்பிடிப்பது'' எப்படி? அந்நாளில் ஓய்வு எடுப்பது எப்படி? எந்தெந்த வேலைகளைச் செய்யலாம்? தடைசெய்யப்பட்ட வேலைகள் யாவை? இவை பற்றிய விளக்கங்களை மக்களுக்குப் பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றோர் விரிவாகவும் துல்லியமாகவும் எடுத்துக் கூறினர். எல்லா சமுதாயங்களிலும் தூய்மை பற்றிய ஒழுங்குகள் உண்டு. அதுபோலவே யூத சமயத்திலும் பல ஒழுங்குகள் இருந்தன. ஆனால் இயேசு அந்த ஒழுங்குகள் மனிதரின் நன்மைக்காகவே எழுந்தனவென்று வலியுறுத்துகிறார்.

ஓய்வு நாள் பற்றிய விளக்கம் அளிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டு என்பதைப் பரிசேயர்கள் அறியத் தவறிவிட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ''ஓய்வு நாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே'' (லூக் 6:5) என்று கூறி, தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். இதன் பொருள் என்ன? ஓய்வு நாளில் இயேசுவின் சீடர்கள் தடைசெய்யப்பட்ட வேலை செய்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு அந்த விளக்கம் சரியானதல்ல என நிலைநாட்டுகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக முற்காலத்தில் தாவீது அரசர் குருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய ''அர்ப்பண அப்பத்தை''த் தாமும் உண்டு தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்ததை முன்வைக்கிறார். தாவீது செய்ததும் பரிசேயர் கணிப்புப்படி சட்ட விரோதம் என்றுதான் கணிக்கப்பட வேண்டும். எனவே இயேசு தம்மைத் தாவீது அரசருக்கும் மேலாக உயர்த்துவதையும் இவண் காண்கின்றோம். மேலும், தொடக்க காலத் திருச்சபையில் ஓய்வு நாள் பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்தது என்பதும் நற்செய்தி நூல்களில் காணப்படுகிறது. யூத சமயம் வழங்கிய தூய்மை சாய்ந்த சட்டங்களையும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களையும் இயேசு ஏற்கவில்லை. அச்சட்டங்களும் விளக்கங்களும் மனிதரின் நலனுக்கு எதிராகப் போனால் அவற்றால் யாதொரு பயனும் இல்லை எனவும், மாறாக அவற்றை ஒதுக்க வேண்டும் எனவும் இயேசு கற்பித்தார். இன்றும் கூட, சட்டத்தின் பெயரால் மனித நலன் புறக்கணிக்கப்படுகின்ற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. இயேசுவின் சீடர்களும் மனித நலனை ஒடுக்குகின்ற சட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனித நலனை மேம்படுத்துகின்ற வழிகளைக் காணவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசு வழங்கிய போதனைகளை நாங்கள் கருத்தாகக் கடைப்பிடிக்க அருள்தாரும்.