யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் புதன்கிழமை
2014-09-03

புனித பெரிய கிரகோரி




முதல் வாசகம்

நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9

சகோதரர் சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேச முடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்? ஏனெனில், ஒருவர் `நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றும் வேறொருவர் `நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாயிருந்த பணியாளர்கள்தானே! ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அருளியவாறு அவர்கள் தொண்டு ஆற்றுகிறார்கள். நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பாளர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல்33: 12-13. 14-15. 20-21

2 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். பல்லவி

14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார். கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், ``நீர் இறைமகன்'' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார். பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், ``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவோ அவர்களிடம், 'நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்' என்று சொன்னார்'' (லூக்கா 4:43)

இயேசு கலிலேயாவில் ஆற்றிய பணியை லூக்கா சிறப்பான முறையில் விளக்குகிறார். கலிலேயாப் பகுதியில் ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை இயேசு அறிவித்துவந்தார். சில சமயங்களில் மக்கள் அவரைத் தேடிச் சென்று அவரை வற்புறுத்தித் தங்களோடு தங்கியிருக்குமாறு கேட்டனர். ஏன், ''அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்'' (லூக்கா 4:42). அப்போது இயேசு அவர்களைப் பார்த்துக் கூறிய சொற்கள் ஆழமான பொருளுடைத்தவை. இயேசுவின் பணி ஓர் ஊராருக்கு அல்லது நாட்டவர்க்கு மட்டும் உரித்தானதல்ல. அது உலக மக்கள் அனைவருக்கும் உரித்தானது. எனவே, இயேசு பிற இடங்களிலும் தாம் நற்செய்தி அறிவிக்கச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தார். லூக்கா இச்செய்தியைத் தனிப்பட்ட விதத்தில் கோடிட்டுக் காட்டுகிறார்.

இயேசுவின் பணியைத் தொடர அழைக்கப்பட்டுள்ளது திருச்சபை. இயேசுவின் பெயரால் ஒன்று கூட்டப்பட்டு, இயேசுவின் சீடர் குழாமாக விளங்குகின்ற திருச்சபை தனிப்பட்ட இனத்தாருக்கு, நாட்டாருக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தனிச்சொத்து அல்ல. திருச்சபையின் பணி இவ்வுலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். திருச்சபை இவ்வாறு செயல்பட வேண்டும் என்றால், அதற்கு உலகளாவிய ஒரு பார்வை வேண்டும்; எல்லா மக்களின் பண்பாடுகளையும் கலாச்சார அம்சங்களையும் தேர்ந்து தெளிந்து, அவற்றில் நலமானவற்றை உள்வாங்கி, திருச்சபை கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். எல்லா மக்களின் பண்பாட்டுச் செல்வங்களிலும் நலமான அம்சங்கள் உண்டு, நலிந்த அம்சங்கள் உண்டு. எனவே அவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஆய்ந்து பார்த்து, நல்லவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் திருச்சபை முன்வர வேண்டும். அப்போது கடவுளின் கொடையாக மக்கள் பெறுகின்ற நன்மைகள் மீண்டும் புதப்பிக்கப்பட்டு, புடமிடப்பட்டு, கடவுளின் புகழ்பாடுகின்ற இசைப்பாவாக மாறிடும்.

மன்றாட்டு:

இறைவா, குறுகிய மனப்பான்மை தவிர்த்து, இவ்வுலகமே எங்கள் குடும்பம் என்றும், உம் குடும்பம் என்றும் பரந்த உணர்வோடு நாங்கள் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.